வியாழன், ஜூலை 28

கலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை




-அ.மார்க்ஸ்

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மரணம் உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்திலும் இலங்கையிலும் அவர் எந்த அளவு அறியப்பட்டிருந்தாரோ அதற்குச் சற்றும் குறையாத அளவிற்குத் தமிழகத்திலும் அறியப்பட்டிருந்தார், மதிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தின் உயராய்வு நிறுவனங்களோடும் பல்கலைக் கழகங்களோடும் இறுதிவரை அவருக்குத் தொடர்பு இருந்து வந்தது . வருகைப் பேராசிரியராக அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார். அவரது உரைகளையும், ஆலோசனைகளையும் கேட்கும் வாய்ப்பு மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்ந்து இருந்து வந்தது.

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எழுத வந்த என்னையொத்த அன்றைய இளைஞர்களுக்கு ஈழத்து அறிஞர்கள் மிகப் பெரிய ஆதர்சங்களாகவும் உந்து சக்திகளாகவும் விளங்கினர். குறிப்பாகக் கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரையும் சொல்ல வேண்டும். அன்று பெரிய அளவில் இடதுசாரிச் சிந்தனையுடையவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஜார்ஜ் தாம்சனின் நேரடி மாணவர்களாகிய இவ்விருவரும் மார்க்சியர்களால் மட்டுமின்றிப் பல்கலைக் கழக மட்டங்களிலும் பெரிதும் மதிக்கப்பட்டனர். முன்னதாக இங்கிருந்த மர்க்சியத் திறனாய்வாளர்கள் மத்தியில் ஆய்வு சார்ந்த கறார்த்தன்மை கூடியிருக்கவில்லை. பல்கலக் கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் மத்தியில் மார்க்சியம் உள்ளிட்ட நவீன சிந்தனைகளின் பயன்கள் உள்வாங்கப் பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இலக்கியங்களின் சமூக வேர்களைத் துழாவி அடையாளங் காட்டக் கூடிய வல்லமை வாய்ந்த கருவியாகிய மார்க்சிய அணுகல்முறையைக் கைக்கொண்டிருந்த இவர்கள் இறுக்கமான ஆய்வு நெறிமுறைகளுடன் பண்டைய இலக்கியங்களை மட்டுமின்றி நவீன இலக்கியங்களையும் அணுகி வெளிக் கொணர்ந்த பல்வேறு முடிவுகளும், பாய்ச்சிய வெளிச்சங்களும் எல்லோரையும் பிரமிக்க வைத்தன. இவர்களோடு அன்று தமிழகத்திலிருந்த மார்க்சிய ஆய்வாளர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களையும் சொல்ல வேண்டும். இம்மூவரின் பங்களிப்புகளுடனும், இவர்களால் உந்தப்பட்டவர்களின் கொடைகளுடனும் ஒரு பத்தாண்டுகாலம் மார்க்சிய ஆய்வுமுறை தமிழ் ஆய்வுலகில் கோலோச்சியிருந்தது என்றால் மிகையாகாது.

வெகு விரைவில் பேராசிரியர்கள் கைலாசபதியும் வனமாமலையும் அகால மரணமுற்றதைத் தொடர்ந்து சிவத்தம்பி அவர்களின் முக்கியத்துவம் ஈடு இணையற்றதாயிற்று. சிவத்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகும் பெருவாய்ப்புப் பெற்றவர்களில் நானும் ஒருவன். எண்பதுகளின் மத்தியில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக ஆறு மாத காலம் அவர் வந்து தங்கியிருந்தபோது கிட்டத்தட்ட ஒரு குருகுல வாசம்போல அவருடன் இருந்து பலவற்றையும் கற்றுக் கொள்ளும் பேறு எனக்கும் பொ. வேல்சாமிக்கும் கிட்டியது. ”பாரதி மறைவு முதல் மகாகவி வரை” எனும் முழு நூலையும் அவருடன் இணைந்து எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. அனேகமாக அப்படியான ஒரு இணை ஆசிரிய வாய்ப்புக் கிட்டியது எனக்கு மட்டுந்தான் என்றே நினைக்கிறேன்.

பேராசிரியரிடம் நாங்கள் மார்க்சியத்தையும், ஆய்வு நுணுக்கங்களையும், நூலெழுதும் திறனையும் மட்டுமல்லாது பல நல்ல மனிதப் பண்புகளையும் கற்றுக்கொண்டோம். எந்நேரமும் எந்த ஐயத்தையும் யார் வந்து கேட்டாலும், எத்தனை வேலையிருந்த போதிலும் அவற்றை ஒத்தி வைத்துவிட்டு அவர்களுடன் பேசித் தீர்த்து வைப்பார். இலங்கையிலிருந்து ஒரு பேராசிரியர், மார்க்சியச் சிந்தனையாளர் வந்துள்ளார் என அறிந்து கிராமப் புறங்களிலிருந்து கட்சி ஊழியர்களெல்லாம் கூட அவரைச் சந்திக்க வருவார்கள். எல்லோரிடமும் அலுத்துக் கொள்ளாமல் பேசுவார். எல்லோரிடமிருந்தும் அறிந்துகொள்ள அவருக்கும் செய்திகள் இருக்கும். முகந்தெரியாத ஒருவர் வந்து தன் நூலுக்கு முன்னுரை கேட்டால் முகங் கோணாமல் எழுதித் தருவார். நூலின் தரம் பற்றிக் கவலைப் படமாட்டார்.

கரவெட்டியில் பிறந்து, வல்வெட்டித்துறையில் மணமுடித்து வாழ்ந்து, கொழும்பில் மடிய நேர்ந்த பேராசிரியர் மரபுகளோடு இறுக்கமான தொடர்பைப் பேணியவர். சைவ மரபு சார்ந்த குடும்பமொன்றில் பிறந்தவராகிய அவர் எந்த அளவுக்கு அவர் மார்க்சியராக இருந்தாரோ, அந்த அளவிற்கு இந்த மரபை நேசிப்பவராகவும் இருந்தார். தஞ்சையிலிருந்து புறப்படும் முன்னர் இங்குள்ள சைவத் திருத்தலங்களுக்கெல்லாம் சென்றுவர விரும்பினார். அழைத்துச் சென்றோம். அது வெறுமனே பழங் கோயில்களை ஆர்வம் கருதிப் பார்த்து வரும் பயணமாக மட்டும் அமையவில்லை. மரபின் மீதிருந்த இந்தப் பற்றும், பண்டைய இலக்கியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும், மரபு வழிப்பட்ட தமிழறிஞர்கள் மத்தியிலும் அவருக்குச் செல்வாக்கையும் மரியாதையையும் ஈட்டித் தந்தது. ஒரே நேரத்தில் மார்க்சியர்கள் மத்தியிலும் மரபிறுக்கம் மிகுந்தவர்கள் மத்தியிலும் திருஉருவாக ஏற்றுக் கொள்ளக்கூடியவராக அவர் இருந்தது அவரை அறிந்தவர்களுக்கு வியப்பான செய்தியல்ல.

தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியை ஒட்டி அறியப்பட்ட மார்க்சியத்திற்கு ஏற்பட்ட சரிவு எல்லோரையும்போல அவரையும் நிலைகுலைய வைத்தது. இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களுக்குள் அவர் செல்லவில்லையாயினும், சோஷலிச எதார்த்தவாதம், பிரதிபலிப்புக் கொள்கை, அடித்தள- மேற்கட்டுமான உருவகம் அகியவை குறித்த வரட்டுத்தனமான அணுகல்முறைகளை மார்க்சியத்தின் பெயரல் தூக்கிப் பிடித்து வந்தது குறித்துச் சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. பக்தி இயக்கத்தின் எழுச்சியையும் சமண- பவுத்த மதங்களின் வீழ்ச்சியையும் வணிக வர்க்கத்தை வீழ்த்தி நிலவுடைமை வர்க்கம் வெற்றி பெற்ற வரலாறாகக் கட்டமைத்து வந்த கோட்பாட்டையும் கைவிடுவதாக அவர் அறிவிக்க வேண்டியநிலையும் ஏற்பட்டது. இப்படியாகக் கைலாசபதியும் சிவத்தம்பியும் அடித்தள- மேற்கட்டுமான அணுகல்முறையினூடாகக் கட்டமைத்த இந்தக் கோட்பாடும் இன்று ஆய்வுலகில் கைவிடப்பட்ட ஒன்றாயிற்று. இவர்கள் கட்டமைத்த அளவிற்கு சங்கம் மற்றும் சங்கமருவிய காலங்களில் வலுவான வணிகவர்க்கமொன்று உருப்பெற்றிருக்கவில்லை.

தொண்ணூறுகளுக்குப்பின் இங்கே அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனநிலைச் சிந்தனைகள், போஸ்ட் மார்க்சியம் முதலான சிந்தனைகள் மேலுக்கு வந்து ஆய்வுலகை நிரப்பியபோது சிவத்தம்பி அவர்கள் திகைத்து நிற்க வேண்டியதாயிற்று. மார்க்சியர்கள் சிலரது தூண்டுதலின் விளைவாக இந்தப் புதிய சிந்தனைகளுக்குப் பதிலிருக்கும் முகமாக அவர் அளித்த சில பேட்டிகளும். எழுதிய சில கட்டுரைகளும் அவரது மரியாதையை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறைக்கவே செய்தன.

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அவர் பெரும் உள மற்றும் உடல் நலிவுகளுக்கு ஆளாகியிருந்ததை நாம் அறிவோம். எனினும் சக்கர நாற்காலியின் துணையின்றி வாழ இயலாதபோதுங்கூட அவர் தனது கல்விப் பயணங்களை நிறுத்திக் கொண்டதில்லை. பிறர் உதவியின்றிப் படிக்க இயலாத நிலையிலுங்கூட அவர் கருத்தரங்கங்களில் உரையாற்றுவதை நிறுத்தவில்லை. ஆனாலும் அவரது இந்த உடல் நலிவுகள் அவரது சிந்தனை வெளிப்பாடுகளையும் பாதிக்கவே செய்தன. கடந்த பத்தாண்டுகளில் அவரிடமிருந்து காத்திரமான வெளிப்பாடுகள் ஏதுமில்லை.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவாளராக அவர் இருந்தபோதிலும் என்னாளும் அரசைப் பகைத்துக்கொள்ளும் அளவிற்கு நிலைபாடுகளை எடுத்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்ற ஆண்டு கருணாநிதி தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்திய செம்மொழி மாநாட்டில் அவர் பங்கு பெற்றது பலரது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் காரணமாகியது.

சிவத்தம்பி என்கிற அறிஞர், சிந்தனையாளர், பேராசிரியர் வாழ நேர்ந்த காலமும் களமும் மிகுந்த சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த ஒன்று. ஆனால் இதுபோன்ற அவலச் சூழல்களில் வாழ நேர்ந்த கொடுமை உலகில் எண்ணற்ற பல அறிவுஜீவிகளுக்கும் வாய்த்திருக்கிறது. இத்தகைய நிலையை அவர்களெல்லாம் எப்படி எதிர்கொண்டார்கள்? சிவத்தம்பி எப்படி எதிர்கொண்டார்? சிவத்தம்பி குறித்த மதிப்பீடுகளைச் செய்யும்போது இந்தக் கேள்வி நம்முன் எழுவது தவிர்க்க இயலாது.

திருமணமான என் மகளை வாழ்த்த சக்கர நாற்காலியில் வந்திருந்து, மாடிமீது ஏற இயலாது மணமக்களைக் கீழே இறக்கி வாழ்த்திச் சென்ற்தையும், சென்ற ஆண்டு நான் கொழும்பு வந்திருந்தபோது என்னை அருகழைத்துத் தொட்டுத் தடவி விசாரித்து வாழ்த்தியதையும் நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன.

( தினக்குரல், ஜூலை 10, 2011 )

சனி, ஜூலை 9

பேராசிரியரின் பேட்டி ஒன்று



பேராசிரியரின் பேட்டி ஒன்று
நன்றி - அனஸ் (இளைய அப்துல்லா)

ஞாயிறு, ஜூலை 3

நூலகம் செய்திமடல் 6 வெளிவந்துள்ளது.



நூலகம் செய்திமடல் 6 வெளிவந்துள்ளது. இவ்விதழில் நூலகம் நிறுவனம் தொடர்பான சந்திப்பு நிகழ்வுகள் பற்றிய பதிவு, மல்லிகை முதல் இதழின் ஆசிரிய தலையங்கம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கலை இலக்கிய சங்கத்தின் வருடாந்த இலக்கிய விழா பற்றிய பதிவு, இலங்கையில் இசையியல் நூல்கள் பற்றி சிந்து கோபியின் கட்டுரை, ஆகியவற்றுடன் இம்மாத நூலகம் செய்திமடல் வெளிவந்துள்ளது. 8 பக்கங்கள் கொண்ட இவ்விதழை இலவசமாகவே பிடிஎப் கோவையாக வாசிக்கமுடியும்.http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2011.06.15.pdf

சனி, ஜூலை 2

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை




யோகி

நன்றி - வல்லினம், இதழ் யூலை 2011

தர்மினியின் கவிதை தொகுப்பான சாவுகளால் பிரபாலமான ஊர் பற்றி எழுதுவதே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. முதன்மையத் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல் பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எரியப்பட்டது. கவிதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு சரியான சொற்கள் தேவை படுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன் படுத்திக்கொள்ள எனக்கு பொறுமை தேவைப் படுகிறது. அனைத்துக்கும் மேலாக அக்கவிதைகளை கிரகித்துக்கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.

சாவுகளால் பிரபாலமான ஊர், இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள். எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக்காட்டிய கொடூரங்களுக்குப் பெயர் போன ஊர். வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி பொதுமக்கள் மீதும் விடுதலை போராளிகள் மீதும் பிரயோகித்து பிணங்களை சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.

அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர் கொடுத்து கவிதை வடிவில் உருவம் தந்திருக்கிறார். போரின் ஆராத காயங்கள், நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களை கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின் கோபமும் போர் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக்கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால் யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால் எளிதாக இருக்கும் என்று வெம்புகிறார்கள்.

குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்

..................................

நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்.

வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட நமக்கு நத்தை போன்றதொரு வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் பாதுகாப்புக்கூட துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரமே எவ்வகையான கவிதைக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி இப்படி.

சுடுகாற்றுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி

பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.

சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையே சுடுகாடும் இடுகாடும் என்று இருக்கும் போது பிணங்களும் நிம்மதியற்றுதான் இருக்கின்றன.

பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உருப்பைக் கொண்டாடியே இருக்கிறது. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன் சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொது கருத்து ஒன்று பெண் கவிகள் மீது உண்டு. தொகுப்பில் தர்மினியும் உருப்பை பேசுகிறார் இப்படி.

சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்

நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்...

என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச் சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும் அவர்களை சீறுகிறார் தர்மினி. சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள் தன் வீட்டு ஆணின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார். ஒருத்தி தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள். பிரிவை தாங்க முடியாமல் காதலி கண்ணீர் வடிக்கிறாள். தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள். அவனின் மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினத்துக்கொண்டிருக்கிறாள். மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள். அவனின் தாய் சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள். அந்தச் சமயத்தில் அவன் போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவிச் செய்து கொன்று மண்ணை போட்டு மூடி இருக்கலாம். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும் பாத்திரமற்றவர்கள் இவர்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை சொல்லலாம்.

ஈழம் போர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள்தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும், குழந்தை பருவமும் அனியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டுகள் பலவந்தமாக கலவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவரையில் வளரும் குழந்தைக்கும் போர் பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானது.

ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்

..................................

சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும்
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற
துப்பாக்கிகளின் ஓசைகள்


என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே அலைவதை கவிதையில் காணப்படுகிறது. ஓடி விளையாடுப் பாப்பா என்று பாரதி சொன்ன கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. செய்து முடி. அல்லது செத்து மடி என்பதுதான் எழுதாத விதியாக உள்ளது

கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26), தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும் (பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன் நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார். கணவனின் ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிழும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும், மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத பெண்கள் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்?

சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.

..................................

கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.

..................................

மறுநாள் மெதுவாக வந்தானவன்

..................................

இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
மன்னித்து விடு
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?

என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துள்ளியமான பெண்ணியப் பார்வையை காட்டுகிறது.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கவிதையாக 'அகமும் புறமும்' என்ற கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது. மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும்போது, மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல், சதாக் கொல்லும் போரின் நினைவுகளை எப்படி உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும் அறுத்துப்போட முடியாது.

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்…

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்...

ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொலியாக வந்த வண்ணமே உள்ளது. பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். அச்சச்சோ என்று வேதனையைத் துப்பிவிடும் சேதிகள். அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ....அல்லது....இங்கிருந்தபடி விடுதலை போராளிக்கான நியாயங்களை கூட்டம் போட்டு பேசவோ மட்டும்தான் எங்களால் முடியும். சாவுகளால் ஒரு ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கு போது நாங்களும் திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடுதான் இருந்தோம்.
நன்றி - வல்லினம், இதழ் யூலை 2011

வெள்ளி, ஜூலை 1

காற்றுவெளி - மின்னிதழ் வெளிவந்துள்ளது.



யூலை மாத காற்றுவெளி மின்னிதழ் வெளிவந்துள்ளது. ஈழ தமிழக புகலிட படைப்பாளிகளின் படைப்புக்களைத் தாங்கி வழமையான அம்சங்களுடன் இதழ் வெளிவந்துள்ளது. http://issuu.com/kaatruveli/docs/july_issue