திங்கள், ஆகஸ்ட் 22

ஒரு ஈழத்து மெல்லிசைப் பாடல்


(வரிகள்: வீரமணி ஐயர், குரல்: சத்தியா சத்தியதாஸ், ரவிக்குமார்,
இசை: ரவிக்குமார் )

ஞாயிறு, ஆகஸ்ட் 21

இராகவனின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது

காலச்சுவடு வெளியீடாக இராகவனின் ‘விட்டில் –சமகால அரசியல் பகுப்பாய்வு’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது




சனி, ஆகஸ்ட் 13

இனிமையான பாடல்கள்



எனக்குப் பிடித்திருக்கு. முடிந்தால் கேட்டுப் பாருங்கள்.






ஞாயிறு, ஆகஸ்ட் 7

நெருப்புத் துளி



-ஷோபாசக்தி


(யோகரட்ணத்தின் 'தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்' என்ற நூல் வெளியீட்டில் ஷோபாசக்தி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இது. ஈழத்தில் தீண்டாமைக் கொடுமைகள் பற்றிய சில முக்கிய கருத்துக்களை ஷோபாசக்தி கோடிட்டுக் காட்டுகிறார். அதன் ஒரு பகுதியை எனது வலைப்பதிவு நண்பர்களுக்குத் தருகிறேன். கட்டுரையின் முழுவடிவத்தையும் இங்கே வாசிக்கலாம்)
நன்றி - shobasakthi.com

2

ஈழத்துத் தலித் மக்களின் வாழ்வும், பாடுகளும், எதிர்ப்பும், அரசியலும் குறித்துத் தன்வரலாற்றுக் குறிப்புகள் ஊடாக எழுதிச் செல்லும் நூல்களாக பெரியோர்கள் என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, இலங்கையர் செல்வரத்தினம் ஆகியோர் எழுதிய நூல்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளியாகியுள்ளன. யோகரட்ணம் அவர்களது இந்த நூலையும் அவற்றின் தொடர்ச்சியில் வைத்து நாம் பார்க்க முடியும். முன்னைய பெரியோர்களதும் தோழர் யோகரட்ணத்தினதும் நூல்களின் பேசுபொருள்களில் ஒருமித்த புள்ளிகள் ஏராளமாயுள்ளன எனில் விலகிச் செல்லும் அடிப்படைப் புள்ளியொன்றும் உள்ளது. முன்னையவர்கள் மூவரும் வடபுலத்து இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகள். மார்க்ஸியத்தைத் தமது அரசியலாக வரித்துக்கொண்டவர்கள். மாறாகத் தோழர் யோகரட்ணமோ பண்டாரநாயக்கவின் மறைவிற்குப் பின்னால் ஸ்ரீமாவோவின் தலைமையில் அசலான தரகு முதலாளித்துவக் கட்சியாகச் சீரழிந்து போயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். இந்த அடிப்படை அரசியல் வித்தியாசம் ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூலின் பக்கங்களில் விரவித்தான் கிடக்கின்றது.

தோழர் யோகரட்ணம் சண்டிலிப்பாய் கிராமத்தின் ‘ கேணிக்கட்டு’ எனும் தலித் குறிச்சியில் 1950களின் முற்பகுதியில் பிறந்தவர். தனது இளமைப் பருவம் முழுவதும் சாதிய ஒடுக்குமுறைக்கு முகம் கொடுத்தவர். பிஞ்சுப் பருவத்திலேயே பாடசாலையில் தீண்டாமையை அனுபவித்தவர். தனது பதினாறாவது வயதில், இலங்கைத் தமிழ் பவுத்த காங்கிரஸ் தலைவரும் சாதியொழிப்புப் போராளியுமான அய்யா வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலில் தீண்டாமையை எதிர்கொள்ள பவுத்த மதத்தைத் தழுவிய நூறு வடபகுதி தலித் இளைஞர்களுடன் இணைந்து பவுத்தத்தைத் தழுவி பத்தேகம பகுதியிலுள்ள சந்திரவல எனும் மலைக் கிராமத்தின் பவுத்த விகாரையில் சேர்ந்து அங்கேயே கல்வி கற்றவர். போனவர்கள் இடையிலேயே குழப்பிக்கொண்டு வந்தது வேறுகதை. அதற்கான வலுவான காரணமெதுவும் நூலிலும் விபரிக்கப்படவில்லை.

மீண்டும் சண்டிலிப்பாய்…மீண்டும் எதிர்கொண்ட சாதியொடுக்குமுறை, அதற்கெதிரான போராட்டங்கள் எனத் தொடர்ந்த தோழர் யோகரட்ணம் அவரது உற்ற நண்பரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமாகிய விநோதனின் வழிகாட்டலில் எழுபதுகளின் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுகிறார். கட்சியின் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசால் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து விநோதன் பொதுக்கூட்டம் நடத்தியபோது யோகரடணம் விநோதனுடன் இணைந்து கடுமையாக உழைக்கிறார். இதற்கிடையில் தபால் தந்தித்துறையில் யோகரட்ணம் வேலைக்குச் சேர்கிறார். 1977ல் அய்க்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அரசியல் பழிவாங்கலாக யோகரட்ணத்தின் வேலை பறிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்குப் பின்பாக தமிழ் பவுத்த காங்கிரஸ் தலைவர் அய்யா வைரமுத்துவின் உதவியால் இழந்த வேலையை யோகரட்ணம் மீளவும் பெற்றுக்கொள்கிறார். எழுபதுகளின் நடுப்பகுதியில் வடபுலத்திலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களின் மேல் போராளி அமைப்புகள் ஆயுதத் தாக்குதல்களை நிகழ்த்துகிறார்கள். மேயர் துரையப்பா, அமைச்சர் குமாரசூரியர் எனத் தாக்குதல் இலக்குகள் தொடர்கின்றன. இந்தச் சூழலில் எண்பதுகளின் முற்பகுதியிலேயே யோகரட்ணம் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிடுகிறார். பின்னொருநாளில், 1995ல் யோகரட்ணத்தின் உற்ற நண்பன் விநோதனும் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்படுகிறார். இரண்டாயிரம்கள் வரை யோகரட்ணம் கிட்டத்தட்ட அரசியல் அஞ்ஞாதவாசியாகிவிட்டார். ‘இலங்கைத் தலித் சமூக மேப்பாட்டு முன்னணி’ அவரை மறுபடியும் அரசியல் வெளிக்கு அழைத்து வந்தது. இன்று யோகரட்ணம் முன்னணியின் உப தலைவராகயிருக்கிறார்.

இந்நூல் 45 அத்தியாயங்களில் விரியும் நினைவுக் குறிப்புகளின் -அனுபவத் திரட்சிகளின் - தொகுப்பு. தோழர் யோகரட்ணம் என். கே. ரகுநாதன் போலவோ டொமினிக் ஜீவா போலவோ ஓர் எழுத்தாளர் கிடையாது. அவரைத் தீவிர இலக்கிய வாசகர் என்றுகூடச் சொல்ல முடியாது. எனினும் இந்த நாலில் அவரது எழுத்து நடை கோபமும் ஆவேசமும் எள்ளலும் புரண்டுவரும் காட்டாறாக நம்மை அடித்துப்போடுகிறது. உள்ளத்தில் ஒளியுண்டானால் வாக்கினிலே தானாகவே தெளிவு வருமல்லவா. அவர் சொல்ல வரும் கருத்துகளில் அவருக்குத் துளி சந்தேகமோ தளும்பலோ கிடையாது. கடகடவென தனது நினைவுக் குறிப்புகளை அவர் சொல்லியவாறே செல்கிறார். சாதியத்தின் வரலாற்றுச் சுமைகளை நமது முதுகுகளில் சுமந்தவாறே நாம் சிரமத்தோடு தோழரைப் பின்செல்ல வேண்டியிருக்கிறது. படித்து முடித்தவுடன் ஒரு தலித் நெஞ்சில் கனலும் கோபத்துடனும் தலித் அல்லாதவர் குற்றவுணர்வுடனும் தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் என்ற இந்த நூலைத் தமது புத்தக அலுமாரியில் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பார்கள் என்றே நினைக்கிறேன். தலித் மக்களுடைய நெடிய போராட்ட வாழ்வின் ஒருதுளி ஆவணமிது. ஒரு துளி என்றேன்… நெருப்புத் துளி!

யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் அய்ம்பதுகளிலிருந்து எண்பதுகள்வரை நிகழ்ந்த 30 வருடகால சாதியொழிப்புப் போராட்டங்களை யோகரட்ணம் பதிவு செய்கிறார். இந்தப் போராட்டங்களில் அவர் வெறும் சாட்சியோ அல்லது போராட்டத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளரோ அல்ல. அவர் நேரடியாகக் களத்தில் நின்று வியூகம் வகுத்த மாஸ்டர். தோழர் வகுக்கும் மாஸ்டர் பிளான்களால் தோழருக்கு மாஸ்டர் என்ற அடைமொழி வந்து சேர்ந்தது. அதை அவர் நூலிலும் பதிவு செய்திருக்கிறார். போராட்டக் களங்களுடன் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், தலித் மக்கள் சாதிவெறியின் முன்னே இழந்த உயிர்கள், தலித் கலைஞர்கள், தலித் சமூகத்தின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள் என நூல் முழுவதும் தகவல்கள் நிறைந்துள்ளன. சிங்களவர்கள் தமிழர்களைக் கொல்கிறார்களே என இன்று பதறித் துடிக்கும் யாழ்ப்பாணத்து வெள்ளாள வட்டுக்கள் தமது அப்பனும் பாட்டனும் சாதியத்தின் பெயரால் சக தமிழனைச் சுட்டுத் தள்ளிய கதைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்நூலும் கணிசமான உதவிகளைச் செய்யும். தனிநாடு கோரிப் போராடிய நமது இனத்தில் இன்று கூட இடுகாடுகளில் தலித்துகளிற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது கேவலத்திலும் கேவலமான செய்தியல்லவா. நூற்றாண்டுகளாகக் கெட்டிதட்டிய சாதிய உணர்வுக்கு முன்னால் முந்தநாள் முளைத்த தமிழின உணர்வு வெறும் துரும்பே என்பதை நிரூபணம் செய்யும் சம்பவவமொன்றை நூலின் 174 வது பக்கத்தில் யோகரட்ணம் இவ்வாறு பதிவுசெய்கிறார்: “சீரணி நாகம்மாள் கோயிலில் சாமி காவிய தலித் வாலிபர்களை ஆதிக்க சாதியினர் தாக்கியதுடன் அவர்களைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத்திடம் காட்டியும் கொடுத்தனர்”.

சாதிய மனநிலையோடு செயற்படும்வரை இந்த இனம் உய்யுமா? சாதிய விடுதலை சாத்தியமின்றி நமது இனத்தில் வேறெந்த விடுதலையும் சாத்தியமில்லை. தன்னைச் சாதியாக உணரும் மனதால் வேறெந்த விடுதலை குறித்தும் கனவுகூடக் காண முடியாது. சாதியை ஒழிக்காமல் வேறெந்தச் சமூக இழிவையும் நம்மால் போக்கிவிடவும் முடியாது. சாதியத்தை நம்மிடையே வைத்துக்கொண்டே வர்க்க ஒற்றுமையைக் கனவு காணுவது ஏமாளித்தனம். சாதியத்தை நம்மிடையே வைத்துக்கொண்டே இன ஒற்றுமையைப் பேசுவது ஏமாற்றுத்தனமும் அயோக்கியத்தனமும். ‘தீண்டாமைக் கொடுமையும் தீ மூண்ட நாட்களும்’ நூல் சொல்லும் செய்தி இதுவே.

3

நூலில் யோகரட்ணம் கூறிச் செல்லும் சில அரசியல் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றே நான் கருதுகிறேன். இரத்தமும் தசையுமாகத் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் அதீத ஞாபக சக்தியின் உதவியுடன் சம்பவங்களையும் துல்லியமாகப் பதிவுசெய்யும் யோகரட்ணம் குறிப்பான அரசியல் கருத்துநிலை என வரும்போது இடறலான பார்வையோடு வரலாற்றுக் குருடராயிருப்பது நிச்சயம் காட்சிப் பிழையல்ல, அது கட்சிப் பிழை. யோகரட்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரராக நூலில் பேசும் விடயங்கள் இந்த நூலின் ஆகப்பெரிய பலவீனங்கள்.

நூல் முழுவதும் அய்க்கிய தேசியக் கட்சியையும் தமிழரசுக் கட்சியையும் மிக நியாயமாகவும் காட்டமாகவும் கண்டித்துவரும் யோகரட்ணம் 1970ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைந்த அய்க்கிய முன்னணியின் ஆட்சி குறித்து மதிப்பிடும்போது மட்டும் அந்த ஆட்சி படு முற்போக்கானது என்பதோடு மட்டுமல்லாமல் அய்க்கிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் தலித் மக்கள் முன்னேற்றங்களைச் சாதித்தார்கள் என்று அறிக்கையிடுமளவிற்குச் சென்றுவிடுகிறார். அந்த ஏழாண்டு காலத்தைத் தலித்துகளின் பொற்காலம் என நூலின் 89வது பக்கத்தில் பிரகடனப்படுத்தியும் விடுகிறார். அய்க்கிய முன்னணிக்கு அவ்வாறொரு முற்போக்கு முகம் இருந்ததா? அது தலித்துகளின் பொற்காலம்தானா?

இலங்கையில் 1956 பொதுத் தேர்தலில் அரசகரும மொழியாகத் தனிச் சிங்கள மொழிக் கொள்கையை முன்வைத்து SWRD பண்டாரநாயக்க போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். “பண்டாரநாயக்காவின் மூன்று வருட ஆட்சிக்காலத்தில் அவரால் பலவற்றைச் சாதிக்க முடிந்தது. அச்சாதனைகளில் மிகப் பாதகமானதாகக் காணப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் மட்டுமே அவருக்கு அபகீர்த்தியைத் தேடிக்கொடுத்தது” எனத் தனது ‘இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்’ நூலில் குறிப்பிடுவார் சி.கா. செந்திவேல். அந்தச் சட்டம் பண்டாரநாயக்காவுக்கு அபகீர்த்தியை மட்டும் தேடித்தரவில்லை. இலங்கையில் முப்பது ஆண்டுகள் ஓடிய இரத்த ஆற்றின் ஊற்று அந்தச் சட்டம்தான்.

1970ல் அந்த ஊற்றைக் குடைத்துவிட்டது அய்க்கிய முன்னணியின் ஆட்சி. அதுவரை நடைமுறையில் இருந்துவந்த சோல்பரி அரசியல் யாப்புக்குப் பதிலாக அய்க்கிய முன்னணி அரசு புதியதொரு அரசியல் யாப்பை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அந்த அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் இங்கேயிருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் ஆசான்களில் ஒருவரும் “இரு மொழியென்றால் ஒருநாடு, ஒரு மொழியென்றால் இருநாடு” என்று தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக அய்ம்பதுகளில் நாடாளுமன்றத்தில் கர்ஜித்து தீர்க்கதரிசனம் உரைத்தவருமான கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள். அவரை யாப்புத் தயாரிக்கச் சொன்னால் அவர் தமிழருக்கு ஆப்புத் தயாரித்தார்.

சோல்பரி யாப்பில் சிறுபான்மை இனத்தினருக்குப் பாதுகாப்பளித்து வந்த 29வது சரத்து அய்க்கிய முன்னணி அரசின் புதிய யாப்பில் முற்றாக நீக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்பதை யாப்பு சட்டரீதியாக வற்புறுத்தியது. அதுவரை மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்த இலங்கை அரசு பவுத்த மதத்தை அரசு மதமாக ஏற்றுக்கொண்டது. நாட்டு மக்களை பிரசைகள் X நபர்கள் என யாப்பு வித்தியாசப்படுத்தியது. இங்கே நபர்கள் என்று குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்களே குறிப்பிடப்பட்டார்கள். அவர்களது நாடற்ற கையறு நிலையை யாப்பு மேலும் உறுதிப்படுத்திற்று. எரியும் நெருப்பிலே மேலும் பெற்றோலை வார்க்கும் வேலையாக பல்கலைக்கழக அனுமதியில் மொழிவாரித் தரப்படுத்தல் சட்டத்தையும் அய்க்கிய முன்னணி அரசு நிறைவேற்றியது. இந்த யாப்பு இவ்வளவு கொடூரமான விதிகளை நேரடியாகத் தயாரித்தது எனில் அந்த யாப்பு மறைமுகாக உருவாக்கியவைதான் பொன்.சிவகுமாரனும் சத்தியசீலனும் வரதராஜப்பெருமாளும் பிரபாகரனும் பிரான்ஸிசும். ஈழப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் சிங்களப் பேரினவாதிகளே தவிர யோகரட்ணம் நூலில் குறிப்பிடுவதுபோல தமிழரசுக் கட்சியினர் தமிழீழப் போராட்டத்தைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. அதற்கான வல்லமை அவர்களிற்கு தார்மீகரீதியாக மட்டுமல்ல அமைப்புரீதியாகவும் இருந்ததில்லை. தமிழரசுக் கட்சியினர் அரசியல்ரீதியாக அய்க்கிய தேசியக் கட்சியினரின் தமிழ்ப் பதிப்பு எனில் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார நலன்களும் தொழில்களும் சொத்துகளும் செல்வங்களும் கொழும்பிலேயே மையப்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தமிழீழப் பிரகடனம் தேர்தலில் வாக்கு வேட்டைக்காக நடத்தப்பட்ட வெறும் நாடகம். இதைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்றைய தலைவர் ஆனந்தசங்கரி பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டுள்ளார். தமிழீழக் கோரிக்கையை இளைஞர்கள் இவ்வளவு வலுவுடன் முன்னெடுப்பார்கள் எனத் தமிழரசுக் கட்சியினர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. நமது இளைஞர்களின் பலத்தை அவர்கள் அறிந்தபோது அவர்கள் உயிருடனில்லை.

அய்க்கிய முன்னணி அரசு தமிழர்களிற்கும் நாட்டின் மற்றைய சிறுபான்மை இனங்களிற்கும் இழைத்த அநீதிகளைச் சொன்னேன். சரி.. யோகரட்ணம் நூலில் குறிப்பிடுவதுபோல தலித்துகளிற்கு ஏதாவது நன்மையைச் செய்திருக்கிறதா அய்க்கிய முன்னணி அரசு? பொதுவாகவே இலங்கை அரசுகள் தலித் மக்களிற்கு நன்மை செய்து வந்திருப்பதாகச் சில தலித் அரசியலாளர்களிடம் ஒரு மயக்கம் நிலவுவதை நான் கவனித்திருக்கிறேன். அது வெறும் மயக்கம் மட்டுமா அல்லது அதனில் ஏதாவது பொருளிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் 67 வருடங்கள் பின்னே சென்று 24.09.1944ல் நடந்த இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் இரண்டாவது மாநாட்டிற்குச் செல்லவேண்டியிருக்கிறது. அந்த மாநாடு நடைபெறும்போது இலங்கையின் வடபுலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியே கிடையாது. அந்த மாநாடு நடந்து அய்ந்து வருடங்களிற்குப் பிறகுதான் தமிழரசுக் கட்சியே தோற்றுவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் தலித் மக்களிற்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடுகள் கோரியும் தனிவாக்காளர் தொகுதிகள் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுத் தீர்மானம் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. நம்மைப் போன்ற இன்னொரு சாதியச் சமூகமான இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினரால் இந்தக் கோரிக்கைகள் எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில்தான் இலங்கையிலும் இந்த உரிமைக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தியாவிலே பத்தாண்டுகள் காலத்திற்குள்ளாகவே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. காந்தியாரின் உயிருக்கு பாபா சாகேப் அம்பேத்கர் மட்டும் இரங்காமலிருந்திருந்தால் அங்கே தலித்துகளிற்கு இரட்டை வாக்குரிமை கூடக் கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் இலங்கையில் இன்றுவரை இந்த உரிமைக் கோரிக்கைகளின் நிலையென்ன?

இடஒதுக்கீடு, தனிவாக்காளர் தொகுதிகள் ஏதும் இன்றுவரை கிடையாது. அவ்வாறு ஒதுக்கீடுகளை இலங்கை அரசியல் சட்டம் தலித்துகளிற்கு வழங்கவில்லை. இது குறித்து எந்த அரசும் பேசவில்லை. யோகரட்ணம் கொண்டாடும் பொற்கால அரசும் வாய் திறக்கவில்லை. மாறாக அந்தப் பொற்கால அரசு மொழிவாரியான தரப்படுத்தலைக் கொண்டுவந்தது. இந்தத் தரப்படுத்தல் சில ஆண்டுகளில் பொருளாதார அடிப்படையில் மாவட்டரீதியான தரப்படுத்தலாக மாற்றப்பட்டது. இந்த இரண்டுவகைத் தரப்படுத்தலாலும் தலித்துகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டார்கள்.

எழுபதுகளில்தான் தலித்துகளிள் முதற் தலைமுறை பல்கலைக் கழகத்தை நெருங்கவே வாய்ப்புக் கிடைக்கிறது. மொழிரீதியான தரப்படுத்தலால் ஆதிக்கசாதித் தமிழர்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டாலும் அவர்களோடு பல்வேறு தடைகளைத்தாண்டிப் போட்டியிட்டுப் படித்த தலித் மாணவர்களும் சேர்த்தே பாதிக்கப்பட்டார்கள். மாவட்டரீதியான தரப்படுத்தலில் இலங்கையில் தலித்துகள் அதிகமாக வாழும் யாழ் மாவட்டம் பொருளாதாரரீதியாக உயர்ந்த மாவட்டமாகக் கொள்ளப்பட்டது. அது உண்மைதான். யாழ்ப்பாணம் பொருளாதாரரீதியாக முன்னேறிய மாவட்டம்தான். ஆனால் அங்கிருந்த மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரான தலித் மக்கள் பொருளாதாரரீதியாக உயரத்திலா இருந்தார்கள்? அவர்கள் தீண்டாமையோடும் சாதிய ஒதுக்கலோடும் வறுமையோடும் போராடியல்லவா கல்வி கற்கவேண்டியிருந்தது. பொருளாதாரரீதியாக உயர்ந்தவர்கள் என அவர்களையும் தரப்படுத்தி அவர்களது பல்கலைக்கழக அனுமதியை மறுப்பது எந்தவகையில் நியாயமாகும்? இங்கேதான் தலித்துகளிற்கான தனி இட ஒதுக்கீடுக் கோரிக்கையின் முக்கியத்துவமிருக்கிறது. இது குறித்து இலங்கையின் எந்த ஆட்சியாளராவது எந்தத் தமிழ் அரசியல்வாதியாவது எந்த இடதுசாரிக் கட்சியாவது எந்த இயக்கக்காரராவது கவனமெடுத்ததுண்டா? பேசியதுண்டா? இவர்கள் அத்தனைபேருமே தலித்துகளிற்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்பதே உண்மை. தலித்துகளிற்கு பொற்காலத்தை வேறு யாரும் சிருஷ்டித்துத் தரமாட்டார்கள். அதைத் தலித்துகளேதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கை அரசு எந்தக் காலத்திலும் ஆதிக்கசாதியினரின் பக்கமே நின்றிருக்கிறது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் நடத்திய சாதியொழிப்புப் போராட்டங்களின்போது அரசு இயந்திரம் ஆதிக்க சாதியனருடனேயே கைகோர்த்திருந்தது. தோழர் யோகரட்ணம் குறிப்பிடும் தலித்துகளிற்கு பொற்காலமான ஆட்சியில்தான் மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அதனுடன் எந்தத் தொடர்புமே இல்லாத - சொல்லப்போனால் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த - கே. டானியல் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவர் எஸ்.ரி.என். நாகரத்தினமும் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் தலைமறைவாகவேண்டியிருந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்துடன் தோள் நின்றிருந்த இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நா. சண்முகதாசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இலங்கையில் சாதியத்திற்கு இரண்டாயிரம் வருடங்களிற்கும் மேற்பட்ட வரலாறிருக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில் தீண்டாமக்கு எதிராக ஒரேயொரு சட்டம்தான் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டமெனும் அந்த வரைவு 1957ல் நிறைவேற்றப்பட்டது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலைத் தொகுதி உறுப்பினர் ந.இ.இராஜவரோதயம் முன்மொழிய கோப்பாய் தொகுதி உறுப்பினர் கு.வன்னியசிங்கத்தின் வழிமொழிதலோடு இந்தச் சட்டம் நிறைவேறியது. இந்தச் சட்டம் கூட மிகவும் மேலோட்டமானதே. பொது இடங்களில் சாதிப் பாகுபாடு காட்டினால் 100 ரூபாவிற்கு மேற்படாத அபராதம் அல்லது ஆறு மாதங்களிற்கு மேற்படாத சிறை என்பதுவே அச் சட்டத்தின் உள்ளடக்கம். ஆனால் அச் சட்டம் அமுலில் இருந்ததாகவோ அச் சட்டத்தின்படி யாராவது தண்டிக்கப்பட்டதாகவோ எந்தச் செய்திகளும் நானறியக் கிடையாது. இந்தச் சட்டம் பொற்கால ஆட்சியில் சற்றே மாற்றப்பட்டது. அதாவது அபராதம் 2000 ரூபாயாகவும் சிறைத்தண்டனை 3 வருடங்களாகவும் உயர்த்தப்பட்டன. அப்போதும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தகவல்களில்லை. அந்தச் சட்டம் மட்டும் அமுலிலிருந்தால் யாழ்ப்பாணத்திலுள்ள முழுக் கோயில் முதலாளிகளும் அங்கே பூசை செய்யும் பார்ப்பனர்களும் மறியலிலல்லவா இருக்க வேண்டும். கோயில் கருவறை பொதுவிடம் இல்லையா? அங்கே பார்ப்பனர்கள் அல்லாதவர்களை அனுமதிக்க மறுப்பது தீண்டாமையா இல்லையா? இதுபோக யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் பாதிப்பேர்கள் நித்தியமாக மறியலில்தான் இருக்கவேண்டியிருக்கும்.

1970ல் தலைவர் எம். சி. சுப்பிரமணியம் அய்க்கிய முன்னணி அரசில் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். எம்.சி. சுப்பிரமணியம் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். அவரது கட்சிக்கான நீண்ட உழைப்பின் பயனாகவும் அவருக்குத் தலித் சமூகத்திடமிருந்த அளப்பெரிய செல்வாக்குக் காரணமாகவும் அவர் நியமன உறுப்பினராக்கப்பட்டார். தன்னுடைய பதவிக் காலத்தில் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தலித் சமூகத்திற்குத் தனது சொந்த முயற்சியால் சாதித்திருக்கிறார் என்பதே எனது மதிப்பீடு. அந்த நன்மைகளும் கூட அவரது அதிகாரத்தின் எல்லைகளுக்குள்ளேயே இருந்தது. அது அவரின் தவறு கிடையாது. நமது நாடாளுமன்ற அமைப்பு ஒரு நியமன உறுப்பினருக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே வழங்கியிருக்கிறது. எம்.சி சுப்பிரமணியத்தின் முயற்சியில் சில பாடசாலைகளும் பொதுக் கட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தலித் இளைஞர்களிற்கு வேலை வாய்ப்புகளில் அவர் முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதைக் கடந்து எம்.சி. சுப்பிரமணியம் அவர்களால் சாதியக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் சாதிக்க முடியவில்லை. ஏனெனில் பொற்கால ஆட்சி அதை அனுமதிக்காது. பொற்கால ஆட்சியில் எம். சி. சுப்பிரமணியம் அவர்களிற்கா தடித்த வெள்ளாளர் குமாரசூரியருக்கா அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன எனச் சற்று யோசித்துப் பாருங்கள். பொற்கால ஆட்சியின் யோக்கியதை விளங்கும்.

தலைவர் எம்.சி. சுப்பிரமணியத்தின் நாடாளுமன்ற நுழைவு குறித்து இன்னொரு பார்வையுமுண்டு. அந்தப் பார்வை யோகரட்ணத்தின் பார்வைக்கு நேர் எதிரானது. ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ நூலின் 204வது பக்கத்தில் சி.கா. செந்திவேலும் ந. இரவீந்திரனும் இவ்வாறு சொல்கிறார்கள்: “எம். சி. சுப்பிரமணியம் 1970 லும் ரீ. இராஜலிங்கம் 1977 லும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வெறும் நாமத்துடனேயே பதவி வகித்தனர். ஆனால் அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார, அரசியல், சமூக வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவர முடியவில்லை. அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கல்வி பொருளாதார மேல்நிலையாக்கம் நோக்கி நின்ற சிலருக்கும் தம்மைச் சூழவுள்ள உற்றார் உறவினர்களிற்கும் இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாய்ப்பு வசதிகளை வழங்கிக்கொண்டனர். அவற்றிற்கு மேலாக ஏதாவது செய்யப்பட்டிருப்பின் அவை மிக அற்பமானவையேயாகும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் குறிப்பட்ட உரிமைகளும் அவற்றிற்கான வெற்றிகளும் பாராளுமன்றத்தால் அல்லாமல் புரட்சிகரப் போராட்டங்களினாலேயே பெறப்பட்டன”. செந்திவேல் - இரவீந்திரனின் கருத்துகளையும் நாம் தட்டிக்கழித்து விட முடியாது. அரசு என்பது ஓர் ஒடுக்குமுறை நிறுவனம் என்ற உணர்வு ஒரு சமூகப் போராளியிடம் எப்போதுமிருக்க வேண்டும். அரசை அணுகி நமது உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வது என்பது வேறு அரசுக்குப் புகழ்பாடி பொற்காலம் எனச் சான்றிதழ் வழங்குவது வேறு அல்லவா!

தோழரின் நூலில் யூ.என்.பி. அமைச்சர் சிறில் மத்தேயு குறித்தும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தலித் சமூகத்தின் நண்பனாக யோகரட்ணத்தால் சித்திரிக்கப்படுகிறார். ஒரு வேலை வாய்ப்பையோ அல்லது வேலை மாற்றல் உத்தரவையோ வழங்கிவிட்டால் அவர்களையெல்லாம் தலித் சமூகத்தின் நண்பனாகவும் விடிவெள்ளியாகவும் யோகரட்ணம் மதிப்பிட்டுவிடுகிறாரோ என அச்சமாயிருக்கிறது. நன்றி பாராட்ட வேண்டியது கடமைதான். அதற்காக நன்றியின் மீது சமூகப் புரட்சி அடையாளங்களைப் பட்டும் படாமலும் யோகரட்ணம் சுமத்தித்திவிடுவதுதான் பொருத்தமில்லாதது. இங்கே சற்றுமுன் ராகவன் உரையாற்றியபோது சிறில் மத்தேயுவின் உண்மையான இனவாதக் கொலைகார முகத்தை தோழர் நா. சண்முகதாசனின் கட்டுரையை ஆதாரம் காட்டித் தோலுரித்துக்காட்டினார். 1983 ஜுலை தமிழினப் படுகொலையை திட்டமிட்டு வழிநடத்திய முதன்மைக் குற்றவாளி சிறில் மத்தேயு. 25 தலித் இளைஞர்களிற்கு வேலைவாங்கிக் கொடுத்ததற்காக சிறில் மத்தேயுவைக் கொண்டாடும் நூலாசிரியர் சிறில் மத்தேயுவின் வழிநடத்தலில் கொல்லப்பட்ட 2000 உயிர்களையும் கவனம் கொண்டேயாக வேண்டும். அந்த இரண்டாயிரத்தில் எத்தனை நூறு தலித் இளைஞர்கள் என்று கூடவா யோகரட்ணம் சிந்திக்கமாட்டார். அந்த வன்கொடுமைச் சம்பவங்களில் மலையகத்தில் கொல்லப்பட்டவர்களெல்லாம் யார்? 1981ல் யாழ் பொது நூலகமும் 90 000 நூல்களும் சிறில் மத்தேயுவின் உத்தரவிலேயே எரிக்கப்பட்டன. சிறில் மத்தேயுவும் காமினி திசாநாயக்காவும் பெஸ்டஸ் பெரேராவும் நேரடியாக யாழ்ப்பாணம் வந்திருந்து இதை நடத்தி முடித்தார்கள். 1986ல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பதவிக்குத் தலித் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட போது அப்போது யூ.என்.பி அமைச்சராயிருந்த லலித் அத்துலத் முதலி “தலித் ஒருவருக்கு அரசாங்க அதிபர் பதவி வழங்குவதை யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறி அந்த நியமனத்தை இரத்துச் செய்ததும் இப்போது என் ஞாபகத்தில் வருகிறது.

தோழர்களே தலித் அரசியலென்பது சாதி அரசியல் கிடையாது. அது அதற்கு முற்றிலும் எதிரானது. சாதியொழிப்புத்தான் தலித் அரசியலின் நோக்கு. தலித் என்ற சொல்லுக்கு நசுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள் எனப் பொருள். சாதியால் ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமல்லாது அனைத்து அதிகார நிலைகளாலும் ஒடுக்கப்பட்டவர்களை, விளிம்புநிலையினரை, ஒடுக்கப்படும் சிறுபான்மையினரை தலித் அரசியல் எப்போதும் பிரதிநிதித்துவம் செய்யும். சமூகத்தின் எந்தவொரு பிரிவுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் தலித் அரசியலின் தவிர்க்க இயலாத பண்பு. அதை விடுத்து ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ செய்தது போல யுத்தத்தை முடித்து வைத்ததற்காக மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்து அறிக்கை விடுவது தலித் அரசியலே கிடையாது. அது வெறும் புலியெதிர்ப்பு அரசியல் மட்டுமே. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களிற்கு தலித் முன்னணி என்ன பதில் வைத்திருக்கிறது? சரணடைந்த போராளிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதற்காகவா தலித் முன்னணி ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறது? போராளிப் பெண்களின் உடலங்களின் ஆடைகளைக் களைந்து இலங்கை இராணுவம் வன்புணர்ச்சி செய்ததற்காகவா தலித் முன்னணி ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறது. எங்களது முற்றங்களிலும் கோடிகளிலும் நிரந்தரமாக இராணுவத்தை விட்டு வைத்திருப்பதற்காகவா தலித் முன்னணி ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறது? புலிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்தார்களாம். அரசியல் எதிரிகளை ஆயுதத்தால் அகற்றுவது என்கின்ற புலிகளின் கோட்பாட்டிற்கும் தலித் அரசியலிற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது தோழர்களே. நசுக்கப்பட்டவர்களினதும் ஒடுக்கப்பட்டவர்களினதும் விடுதலை அரசியலைக் கையிலெடுத்திருக்கும் தலித் முன்னணி ஓர் இனப்படுகொலையை நடத்தி முடித்த தலைமைப் போர்க்குற்றவாளிக்கு நன்றி தெரிவிப்பது தலித் முன்னணியின் அடிப்படை அரசியல் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியது. “யுத்தம் ஒரு தீர்வேயல்ல” என வாய் வார்த்தையாகத் தன்னும் சொன்ன தோழர் வாசுதேவ நாணயக்கார என் மனதில் இப்போது உயர்ந்து நிற்கிறார்.

4

நான் தோழர் யோகரடணத்தின் குறிப்பான அரசியல் கருத்துகள் மீது விமர்சனம் வைத்தது இந்த நூலின் முக்கியத்துவத்தைச் சற்றும் குறைத்துவிடாது. அந்த விமர்சனங்களைத் தாண்டியும் இந்த நூலுக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரமிருக்கிறது. இந்த நூல் ஒரு காலத்தின் ஆவணம். இன்னொரு வகையில் இந்தநூல் ஒரு காலத்தின் குற்றப் பத்திரிகை. சாதியம் குறித்த ஆவண நூல்களோ ஆய்வு நூல்களோ நம்மிடம் மிக அரிதாகவே உள்ளன. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பத்து நூல்கள்தான் நம்மிடையே இருக்கின்றன. சாதியத்தை உடைப்பதற்கான சூக்குமம் அதன் வரலாற்றையும் இயங்குதிசையையும் அரசியல் விஞ்ஞானத்தின் வெளிச்சத்தில் புரிந்துகொள்வதிலேயே தங்கியிருக்கிறது. அந்தப் புரிதலுக்கு இத்தகைய நூல்கள் வரலாற்றின் ஒரு துளியை வழங்கினாலும் அவற்றின் பயன் அளப்பெரிதாயிருக்கும். தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் கிடையாதல்லவா!

சாதியம் குறித்து ஓர் இலட்சம் பக்கங்களில் ஆய்வு செய்து எழுதியிருக்கும் மேதை அண்ணல் அம்பேத்கரையும் சாதியத்திற்கு எதிரான பரந்துபட்ட மக்கள் இயக்கத்தையும் கலாசார புரட்சியையும் நடத்திய தந்தை பெரியாரையும் நமது ஈழத் தமிழ்ச் சமூகம் சரியான பொருளில் அறிந்ததேயில்லை. அவர்கள் ஈழத்தின் சாதியொழிப்பு இயக்கங்களாலும் இடதுசாரி இயக்கங்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டது நமது சமூகத்திற்கு விளைந்த பேரிழப்பு. தோழர் யோகரட்ணத்தின் 184 பக்க நூலில் ஓரிடத்தில் கூட அம்பேத்கரோ பெரியாரோ குறிப்பிடப்படுவதில்லை என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.

சாதியத்தின் வரலாற்று - அரசியல் பாத்திரத்தைப் கற்பதும், கற்றதைச் சமூகத்திடம் எடுத்துச் செல்வதும் நமது கூட்டுக் கடமையாயிருக்கிறது. சாதியம் குறித்த மரபு மார்க்ஸியப் பார்வையும் தேசிய விடுதலையோடு சாதிய விடுதலையை இணைத்து நோக்கும் பார்வையும் நமது அறிவுஜீவிகளின் மனதிலே இருளாய் உறைந்துபோய்க் கிடக்கின்றன. இந்து மதத்திற்கும் சாதியத்திற்கும் உள்ள தொடர்பை அவர்கள் மறந்து கூடப் பேசுவதில்லை. சாதியத்தின் வேரே இந்துமதம்தான் என்ற உரையாடலே நமது சமூகத்தின் அறிவுத்தளத்திலும் கிடையாது பொதுப் புத்தியிலும் கிடையாது. வேரை விட்டுவிட்டு இலைகளைக் கிள்ளிக்கொண்டிருந்தால் பெரு விஷ விருட்சம் சாயாது. அம்பேத்கரியத்தினதும் பெரியாரியலினதும் அறிவு வெளிச்சத்தில் ஒரு நெடிய கருத்துப்போரை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பொதுப் புத்தியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் கருத்துகளை நாம் துளைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கற்றுக்கொள்வது என்பது வெளியிலிருப்பதை மூளைக்குள் திணிப்பதல்ல, ஏற்கனவே மூளைக்குள் திணிக்கப்பட்டிருப்பதை வெளியேற்றுவதே கற்றுக்கொள்ளல் என்பார் தந்தை பெரியார். நமது சமூகம் கற்றுக் கொள்ளவேண்டிய சமூகம்.

வாய்ப்பளித்த தோழர்களிற்கு நன்றி, வணக்கம்

நன்றி -
shobasakthi.com

வியாழன், ஆகஸ்ட் 4

கருணாகரமூர்த்தி ஓர் அற்புதமான கதைசொல்லி




க. நவம்

எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் 'பதுங்குகுழி' சிறுகதைத் தொகுதி கடந்த மாதம் கனடா, ரொறொன்ரோ நகரில் வெளியிடப்பட்டபோது ஆற்றிய உரை.


'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்ற கூற்றுக்கிணங்க அறிவு புகட்டிய ஆசான்களை ஆயுள் உள்ளவும் நன்றியோடு நினைவுகூரும் நல்லவர்களும் உள்ளார்கள். ஏற உதவிய ஏணியை ஒரு பொருட்டாக மதிக்காமல் எட்டி உதைப்பவர்களும் உள்ளார்கள். கண்ட இடங்களில் 'சேர்' என்று சிலர் விழிப்பார்கள். இன்னும் சிலர் ’மாஸ்ரர்’ என்பார்கள். வேறுசிலர் வாத்தியார் என்பார்கள். கண்காணாவிடங்களில் வாத்தி என்றும், சட்டம்பி என்றும், வாஞ்ஞை மிகைப்படின் - கெட்ட கெட்ட வார்த்தை கொண்ட பட்டங்கள் சொல்லியும் சிலர் வசை பாடுவார்கள்.

நண்பர் கருணாகரமூர்தியோ தமது ஆதர்ஸமும் ஆசானும் நண்பருமாகிய அதிபர் திரு. கனகசபாபதி அவர்களுக்கு இந்த ஆக்கத்தைச் சமர்ப்பணம் செய்து, அவரை மட்டுமன்றித் தம்மையும் பெருமைப் படுத்திக்கொண்டுள்ளார். இச்சோபிதமானது, அதிபரது முகத்தில் மட்டுமன்றி ஊரில் சோக்கட்டி தூக்கியதால் – ‘சோக்கட்டி தூக்கியதால் மட்டுமே’ – அதிபரது சொந்தக்காரனான எனது முகத்திலும் புதுவித சோபையை ஏற்படுத்துகின்றது, ஒருவித நம்பிக்கையுடன்!

கடந்த ஒரு வருடத்துக்குள் 12 நூல்களை நான் விமர்சனம் செய்திருக்கின்றேன். நேர்மையான, ஆக்கபூர்மான விமர்சனங்களால் - இங்கு பெயர் சொல்ல விரும்பாத - சில நட்புக்களை நான் இழந்திருக்கிறேன், 'ஆரோக்கியமான விமர்சனத்தால் காப்பாற்றப்படுவதை விட, ஆரவாரம் மிக்க வெறும் புகழ்ச்சியினால் அழிந்துபோவதையே நாம் பெரிதும் விரும்புகிறோம்' என்பதற்கு அடையாளமாக!

அதேவேளை நேரிய, கூரிய விமர்சனங்களால் சில நல்ல புதிய நட்புக்களைப் பெற்றும் இருக்கின்றேன். மெலிஞ்சி முத்தன், ஸ்ரீரஞ்சனி, அகணி சுரேஷ் போன்ற நல்ல நண்பர்கள் அவர்களுள் அடங்குவர்.

கடந்த வருடம் ஜேர்மனியிலிருந்து கனடா வந்திருந்த நண்பர் கருணாகரமூர்தியின் 'கூடு கலைதல்' சிறுகதைத் தொகுதியை நான் விமர்சனம் செய்திருந்தேன். இப்போது மீண்டும் வந்திருக்கும் நண்பர், தமது 'பதுங்கு குழி' சிறுகதைத் தொகுதியையும் நான்தான் விமர்சிக்க வேண்டும் என்று விடாப்பிடியாகக் கேட்டுக்கொண்டார், விமர்சனத்தால் நமது நட்பு இன்னமும் நஞ்சேறிச் செத்துப்போய்விடவில்லை என்பதற்கு ஆதாரமாக!

மனிதன் தனது வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு வடிவங்களில் கற்பனை செய்துபார்த்து, அளவிலா ஆனந்தம் அடைகின்றான். வாழ்க்கையைக் கற்பனை செய்து, பேசி மகிழ்கின்றான். ஓவியமாக வடித்துக் கண்டு மகிழ்கின்றான். படம்பிடித்துப் பார்த்து மகிழ்கின்றான். அதே வாழ்க்கையைக் கதையாக எழுதிப் படித்து மகிழ்கின்றான். இவ்வாறாகக் கற்பனை செய்து பார்க்கப்படும் வாழ்க்கையானது தனது உண்மை வாழ்க்கையை ஒத்ததாக இருந்தால், இக்கற்பனையை ஓர் உன்னதமான கற்பனை என எண்ணி அவன் பரவசம் அடைகின்றான்.

மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் போதுமான அளவுக்கு இல்லாதிருப்பதாலேயே இவ்விதமாக மனிதன் கற்பனையில் அவற்றைக் கண்டுகளிக்கின்றான். எனவே வாழ்க்கையின் போதாமை காரணமாக மனிதன் இலக்கியங்களை நாடுகின்றான் என்ற உண்மை இதிலிருந்து புலனாகின்றது!

இலக்கியம் மனித வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே படம் பிடித்துக்காட்டும் ஓர் ஊடகம் அல்ல. வாழ்க்கையை எந்தவொரு ஊடகத்தாலும் உள்ளவாறு படம் பிடித்துக் காட்ட முடியாது. பதிலாக வாழ்க்கையை மறு அமைப்புச்செய்து, செம்மைசெய்து, பிரதிபலிக்கும் பணியையே இலக்கியம் செய்கின்றது.

இந்த இலக்கியத்தின் நவீனகால வடிவங்களில் ஒன்றுதான் சிறுகதை. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செழுமையான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்க் கவிதையோடு ஒப்பிடும்போது, தமிழ்ச் சிறுகதைக்கு இன்னமும் 100 வயதுகூட ஆகவில்லை. ஆயினும் அந்தக் குறுகிய கால எல்லைக்குள் தமிழ்ச் சிறுகதை குறிப்பிடத்தக்க அளவில் படிப்படியான, பரிணாம வளர்ச்சியை எய்தியுள்ளது என்பதற்கு நண்பர் கருணாகரமூர்த்தியின் 'பதுங்கு குழி' ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
சிறந்த கலை இலக்கியப் படைப்பொன்றின் பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக, அதனை ஒத்த புதிய படைப்புக்கள் அமையவேண்டும் என எதிர்பார்க்கப்படுதல் மரபு. ஆனால் எந்த ஒரு கலை இலக்கியப் படைப்பையும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று வரையறுக்க முடியாது. சிறுகதைக்கும் இச்சித்தாந்தம் பொருந்தும்.

சிறிய கதைதான் சிறுகதை எனச் சுலபமாகக் கூறிவிட முடிகின்றபோதிலும், அளவு அல்லது நீளம் அல்லது பருமன் என்ற ஒரே உரைகல்லை வைத்துச் சிறுகதைக்கு வரைவிலக்கணம் வகுப்பது தவறு. சிறுகதை என்பது சிறியதாகவும் இருக்கத் தேவையில்லை. அதில் கதையும் கட்டாயமாக இருக்கத்தான் வேண்டுமென்றில்லை.
உருவத்தில் சிறியதோ பெரியதோ, ஒருமைப்பட்ட ஓர் உணர்வைக் காட்டுகின்ற, உரைநடையில் எழுதப்பட்டுள்ள ஒரு கதையைச் சிறுகதை எனலாம். Short Story is a love affair and a novel is marriage என்று சமகால அமெரிக்க எழுத்தாளர் Lorrie Moore எதனைக் கருத்தில் கொண்டு கூறியிருப்பார் என்பது ஊகிக்கக் கூடியதுதான்.

ஆயினும் சிறுகதை, காதல், நாவல், கலியாணம் ஆகிய நான்கும் இந்நாட்களில் ஒருசில மணித்துளிகளையோ அல்லது நீண்ட பல வருடங்களையோ எல்லைகளாகக் கொண்டிருக்கலாம் என்பது நடைமுறை உண்மை.

11 சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் வசதி கருதி ஏற்கனவே வகுக்கப்பட்ட சிறுகதை வரம்புக்குள் அடங்கும் கதைகளும் - அடங்க மறுக்கும் கதைகளும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. பின்னைய வகைக்கு 'அந்தி மயங்க முன்னான பொழுதுகள்' 'சூரியனிலிருந்து வந்தவர்கள்' 'பதுங்கு குழி' 'முட்டாப் பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும்' ஆகிய கதைகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

'ஒரு சிறுகதையை நகர்த்திச் செல்லும்போது, தேவையற்ற எதையும் அதிலிருந்து அகற்றிவிட வேண்டும்' என்று சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த எட்கா அலன்போ கூறியுள்ளார். ஆனாலும் சிறுகதை இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை ஒட்டி, சிக்கனமாகச் சொல்ல வேண்டும் என்ற அவரது பரிந்துரையையும் மீறி, இக்காலச் சிறுகதையாசிரியர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு, விதம் விதமான வடிவங்களை அமைத்து, புதுமையான சிறுகதைகளை ஆக்கி, தமது ஆற்றல்களை வெளிப்படுத்துகிறார்கள். அதில் பலர் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்தவகையில் மேற்சொன்ன சிறுகதை வரம்புக்குள் அடங்காத 4 கதைகளையும் இத்தொகுதியில் உள்ளடக்கி இருக்கும் நண்பர் கருணாகரமூர்த்தியும், தமது துணிகர முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

தத்தமக்கு நாட்டம் உள்ள துறைகளில் தம்மை மறந்து ஈடுபட்டலையும் கணவர்கள் இருவரையும், அவர்களது அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் மனைவியர் இருவரையும் 'அந்தி மயங்க முன்னான பொழுதுகள்,' மற்றும் 'கவிஞனின் மனைவி' ஆகிய கதைகளிலும் -
ஞாபக சக்தியை இழந்த நண்பனொருவனை 'சிநேகிதனைத் தொலைத்தவன்' என்ற கதையிலும், அதே ஞாபக சக்தியை இழந்த ஒரு தாயை 'நல்லாக் கேட்டுத்தான் என்னசெய்யப் போகிறேன்?' என்ற கதையிலும் -
ஈழப் போரின் அவலங்களையும், துன்ப துயரங்களையும் 'சூரியனிலிருந்து வந்தவர்கள்' மற்றும் 'பதுங்கு குழி' ஆகிய கதைகளிலும் -
புலம்பெயர் வாழ்வு கற்றுத்தந்த புதுவித பாடங்களை 'எல்லைகள் அற்ற உலகம்' மற்றும் 'முட்டப்பாஸ்' ஆகிய கதைகளிலும் -
கஞ்சத்தனம் மிகுந்த இரு கதை மாந்தரை 'ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல்' மற்றும் 'முட்டாப் பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும்' கதைகளிலும் தரிசிக்கலாம்.

இவ்வாறாகச் சில பொதுப் பண்புகளின் அடிப்படையில் இந்தத் தொகுதியிலுள்ள 11 கதைகளையும் 5 சோடிகளாகப் பிணைக்கின்றபோது, 'அபேதம்' என்ற கதை மட்டும் அனாதரவாகப் பேதப்பட்டு நிற்கின்றது. ஆனால் கூர்ந்து அவதானித்தால், இந்தக் கதையும் இரண்டு வெவ்வேறு கதைகளைக் கொண்ட ஒரு 'சோடிக்கதை' என்றுதான் சொல்ல வேண்டும். எங்கோவொரு இணைய உலாவல் நிலையத்தில் காத்துக்கிடந்து, கைக்காசைக் கொடுத்து உலாவி, முகந்தெரியாத ஒருத்தியிடம் தன் பாலியல் தாபங்களை வக்கிரமாகப் பகிர அலையும் ஒரு விசில் மறவனின் கதை ஒன்று. ஆண்டுக் கணக்காகப் பல கலாசாலைகளின் கதிரைகளைத் தேய்த்து, முனைந்து, முனைவர் பட்டங்கள் வாங்கி ஐரோப்பாவரை வந்திருந்த ஒரு பிரகிருதியின் கண்ணியத்தின் கதை மற்றது. பாலியல் வக்கிரங்களின் அடிப்படையில் இவ்விருவரையும் பலவந்தமாக இணைத்து முடிச்சுப் போட முனைந்திருக்கும் ஆசிரியர், இரண்டு கதைகளையும் - குறிப்பாக Chat Room மில் சரசமாடும் அந்த விசில் மறவனின் கதையை அழகுபடுத்தி விருத்திசெய்து தந்திருப்பாரே ஆயின், வெவ்வேறு இரண்டு நல்ல கதைகளைப் படிக்கும் வாய்ப்பை நாம் பெற்றிருப்போம்.

'முட்டாப் பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும்' கதையில் வரும் நஸீர் நானாவிடமும், 'ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல்' கதையில் வரும் ஜொஹானாவிடமும் காணப்படும் கஞ்சத்தனம் நகைப்புக்குரியது. பல இடங்களில் சிரிக்கவும் செய்தோம்.
ஆனால் வைத்தியர் நஸீரின் நடத்தைகளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தது போன்று, ஜொஹானாவைப் பார்த்து ஏனோ சிரிக்க முடியவில்லை. அவளது நடத்தைகளுக்குக் காரணமாயிருக்கக்கூடிய உளவியல் பின்னணி காட்டப்படாத காரணத்தால்தான், அவளைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை போலும்! அனுதாபம்தான் மேலெழுகின்றது!

போரின் அவலத்தை விலாவாரியாகச் சொல்லும் 'பதுங்கு குழி' எனும் சிறுகதையில் 'இட்டமுடன் எம் தலையில், இன்னபடி என்றெழுதி விட்ட சிவன் செத்துவிட்டான்' என்று கடவுளைச் சபித்துக் கண்ணீர்வடிக்கும் மக்களின் துயரம் பாரமாக நெஞ்சை அழுத்துகிறது.

ஆனாலும் ஒரே தன்மையுடைய நீண்ட விவரணங்களும், நேரடி அனுபவமின்மையின் இயல்பறுந்த வெளிப்பாடும் இடையிடையே அலுப்பூட்டுவதாய் இருந்தன. த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' ஏற்படுத்திய 'மனப் பதகளிப்பை' கருணாகரமூர்த்தியின் 'பதுங்கு குழி' எற்படுத்தத் தவறிவிட்டது - அடிபட்டவனதும் அடிபடுவதைப் பார்த்தவனதும் அவதி வேறுபாடு போல - டானியலதும் செ. கணேசலிங்கனதும் சாதியக் கதைகளுக்கிடையிலான அனுபவ வேறுபாடு போல.

ஆயினும் இவ்வாறான சில அவதானிப்புகளுக்கு மத்தியிலும், படித்து முடித்த போது, என்னை அறியாமலே எனக்குள் கிளர்சியை ஏற்படுத்திய, சமூகத்தை ஆய்வுக்குட்படுத்தி விமர்சனத்துக்குள்ளாக்கிய, பல நல்ல கதைகளைக் கொண்ட ஒரு நூல்தான் இந்தப் 'பதுங்கு குழி.'

ஒரு படைப்பின் உருவம், உள்ளடக்கம், உத்திகள், மொழிநடை என்பவற்றுடன், வாழ்க்கை பற்றிய படைப்பாளியின் கண்ணோட்டம், அனுபவம், கற்பனைவளம், படைப்பாற்றல், படைப்பு மூலமாக உணர்த்த முயலும் செய்தி என்பவற்றின் சீரான ஒருங்கிணைவுதான் அப்படைப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றது என்பது இலக்கிய அனுபவஸ்தவர்களது முடிபு. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் பலவும் இத்தகைய படைப்பம்சங்களது ஒருங்கிணைவின் வெளிப்பாடுகளாக இருக்கின்றமை ஒரு சிறப்பம்சம்ள. அதுவே இக்கதைகளின் வெற்றிக்கான காரணமும் கூட.
மேலாக, இக்கதைகளைப் படைத்திருக்கும் நண்பர் கருணாகரமூர்த்தியின் ஆளுமையையும், அறிவுத் திறனையும், அவதானிக்கும் ஆற்றலையும், வாழ்க்கை பற்றிய நேர்த்தியான கண்ணோட்டத்தையும் அடையாளம் காட்டும் பணியையும் இந்நூல் சிறப்புறச் செய்திருக்கின்றது. இசை, இயற்கை, இலக்கியம், சினிமா, அரசியல், ஆன்மீகம், தத்துவம், தமிழ்மொழி, நாட்டு வைத்தியம், மூலிகை போன்ற பல்வேறு துறைகளில் தம்மிடமிருக்கும் அறிவையும் அனுபவத்தையும் அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். அது இந்நூலுக்கு பெறுமதியையும் பன்முகப் பயன்பாட்டையும் வழங்கியிருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் உண்மை முகத்தை இனம் காணாதவனாக இலக்கியம், புத்தகம், நாவல், சினிமா, சங்கீதம் என, சதா கனவுலகில் வாழ்ந்துகொண்டிருந்த தருணம், 'சில கனவுகள் காணமட்டும் சுகம்' என்ற உண்மை உணர்த்தப்பட்ட பின்னரும் கனவை விதைக்கவே அவாவுறும் கலாதரனும் -
யுத்தம் ஏற்படுத்திய அதிர்ச்சியினால் தன்னை மறந்து, தன்னிலை குலைந்து, தனது கல்லூரிக்கால நண்பனையே அடையாளம் காணமுடியாதளவுக்கு ஞாபக சக்தியைப் பறிகொடுத்த பரிதாப நிலையில் வாழும் பாலச்சந்திரனும் -
எல்லார்க்கும் எல்லாம் உரித்தான இவ்வுலகில், எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை நினைவுறுத்தியதோடு, 'தடையேதுமற்ற தரணியொன்று படைப்போம்' என உறுதிகூறிச் செல்லும் அந்த ஜேர்மன் வாலிபனும் -
மனைவி இன்னொருத்தனோடு ஓடிப்போன பின்னரும் - வாழ்புலத்தில் இதெல்லாம் இயல்பாகிவிட்டதென்று - மரபுக் கண்ணாடிகளைக் கழற்றி வைத்துவிட்டு உலகத்தைச் சாவதானமாகப் பார்க்கும் மனப் பக்குவம்பெற்ற ஆனந்தசிவனும் -
தனது மண்ணில் பிறந்தவன் பிறிதோரு நாட்டில் வைத்துத் தன்னைக் கொடூரமாகத் தாக்கிய வன்மத்தை, அவலத்தை, தன்வீட்டு நாய் தன்மேல் பாய்ந்து பிடுங்கும் மௌடீகத்தைத் தாங்கிச் சகித்த நாட்டு வைத்தியர் நஸீரும் - மனதில் ஆழப் பதிந்துவிட்ட உயிருள்ள பாத்திரங்கள்.

சொன்ன கருத்துக்காகக் காணாமற்போய், அடித்து முறித்த வாழையைப் போல, முனைக் கடற்கரையில், தலை சரிந்து, நெடுத்த உடல்மடிய விழுந்து, செத்துப்போய்க் கிடந்த காசிக்காக மனம் ஊமையாய் அழுதபோது -
அறிவுஜீவிகள், கல்விமான்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்களெல்லாம் அநீதிகளுக்கெதிரான விமர்சனங்களற்ற மௌனிகளாக, தம்மேல் திணிக்கப்பட்பட்ட எதேச்சாதிகாரத்தை எதிர்க்காது, அதிகாரத்துடன் இணங்கிப் போய்க்கொண்டிருந்தபோது, அச்சமின்றி அதர்மங்களை விமர்சித்தமைக்காகக் கொல்லப்பட்ட காசிக்காக மனம் அவதிப்பட்ட போது -
இடையறாத போர்ச் சூழலில் வாழ்வின் அர்த்தம் சிதைந்து போகவே, மேதையாகவும் மனம் பேதலித்தவனாகவும் ஏககாலத்தில் காட்சி தந்து, உண்மைக்காகக் குரல்கொடுத்ததால், சர்வாதிகாரத்தின் கொடுங்கைகளால் சாகடிக்கப்பட்ட காசிக்காக மனம் கண்ணீருகுத்தபோது –
இன்னும் சில காசிகள் வருகிறார்கள்! மேலும் பல காசிகள் வருவார்கள்! அட, உலகம் முழுவதும்தான் எத்தனை காசிகள்! எனக்கூறி நம்பிக்கையை விதைக்கின்றார் ஆசிரியர்.
காசியைத் தரிசிக்கவாவது நீங்கள் கட்டாயம் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டும்!

வாசிப்புப் பரப்புவெளி அபரிமிதமாக வளர்ச்சியடைந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், சுவைபடச் சொல்லப்படும் எழுத்துக்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. சுவைபடச் சொல்வதற்கு மொழி நடையழகும் நகைச்சவையும் அவசியம். நடையழகு என்பது வெறும் மொழியாற்றலல்ல, வெளியுலகையும் அகவுலகையும் கூர்ந்து நோக்கி, மொழியிலான சித்திரங்கள் ஊடாகத் துல்லியமாகச் செல்வதையே அது குறிக்கும். நகைச்சுவை என்பது அன்றாட வாழ்க்கையில் நிகழும் அபத்தங்களைச் சுட்டிச் சிரிக்க வைப்பதைக் குறிக்கும். சுய எள்ளலுடன்கூடிய அங்கதம் பக்தி இலக்கிய காலம் தவிர்ந்த ஏனைய எல்லாத் தமிழ் இலக்கிய காலங்களிலும் வேரோடியிருந்த ஒரு பண்பாகும். புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, கி. ராஜநாராயணன் ஆகியோர் நடையழகையும் அங்கதத்தையும் சரிவரப் பயன்படுத்திய நவீன தமிழிலக்கியப் படைப்பாளிகள். இவ்வழிவந்த ஈழத்துப் படைப்பாளிகளான எஸ்பொ, அ. முத்துலிங்கம் ஆகியோரின் வரிசையில் இடம்பெறுபவர் கருணாகரமூர்த்தி என்பதற்கு பதுங்குழியும் ஒரு தகுந்த சாட்சி. உலகளாவிய இலக்கியங்களில் மொழிநடையழகும் அங்கதமும் முக்கிய சுவைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உள்ளடக்கியிருக்கும் பல சிறுகதைகளைக் கொண்ட இந்த நூலின் பெறுமதியும் பயன்பாடும் உணரக்கூடியதே.

இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் தட்டையானது என்றும், ஒற்றைப் பரிமாணம் கொண்டது என்றும், போர் முடிந்துவிட்டதால் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு எழுதுபொருள் இல்லை என்றும், புலம்பெயர் இலக்கியம் தேங்கிவிட்டது என்றும் இலக்கியப் பேச்சாளர்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை என்பதற்கு ’பதுங்குகுழி’ ஒரு நல்ல சான்று.

பதுங்குகுழி தொகுதியிலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தப்படக்கூடிய சிறுகதை. அனைத்து கதைகளையும் 15 அல்லது 20 நிமிடங்களுக்குள் ஆய்வுக்குட்படுத்தல் சாத்தியமில்லை. இத்தொகுதி மீதான உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் பணியை மட்டுமே செய்யதிருக்கிறேன்.

நானும் ஒருகாலத்தில் கதைகள் எழுதினேன் தான். அத்தி பூத்தாற்போல இப்போதும் இடையிடையே எழுதுவதுண்டு. எழுதுபொருள் வற்றிப் போனதால்தான் நான் மெலிந்து போனேன் போலும்! நண்பர் கருணாகரமூர்த்தியோ தொடர்ந்து எழுதுகிறார். எழுத நிறைய விடயங்களை அவர் சுமந்துகொண்டிருப்பதால்தான் அவர் இன்னமும் பொலிவுடன் ஊதிப் பெருத்திருக்கின்றார்! தினவெடுத்து எழுதுகின்றார்! There is no greater agony than bearing an untold story inside you என Maya Angelou ஒருமுறை சொன்னது பொய்யில்லைத்தான்!

அற்புதமான ஒரு கதைசொல்லியான நண்பர் கருணாகரமூர்த்தி, நிறைய எழுத வேண்டும். அவர் என்றும் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்! விதைகள் முளைப்பதும், உழுப்பதும், விழும் மண்ணைப் பொறுத்த விஷயம் என்ற புரிதலுடன்!

Thanks:-
http://www.facebook.com/notes/navam-k-navaratnam/