புதன், ஏப்ரல் 18

ஒரு சிறு தீப்பொறி - சேரன்


நன்றி :- globaltamilnews.net

சென்ற வாரம் நூலகம் நிறுவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக் ஆயிரக்கணக்கானவர்களையும் அரசியல் என்னும் பெருஞ்சுழலுள் இழுத்துவிட்ட காலம் அது. இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற தகவல்களின்படி, வடபுலத்தை ஆள்வோர் யாழ் நூலகத்தின் கணினிப் பிரிவையும் கழிவுப் பிரிவாக மாற்றுகிற திடீர் ரசவாதம் செய்யும் வல்லமை வாய்த்திருப்பவர்கள் என்றால் தமிழர்கள்உக்கும் நூலகங்களுக்கும் பெரிய அரசியல் பொருத்தப்பாடு இல்லை என்றே தெரிகிறது. இந்த அவலம் எவ்வகையான அரசியல் சுழியைக் கொண்டுவரப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


முப்பத்தொரு முன்பு யாழ்ப்பாணப் பொது நூலகமும் யாழ்ப்பாணப் பட்டினமும் எரிக்கப்பட்ட போது ‘இரண்டாவது சூரிய உதயம்’ என்னும்கவிதையை எழுதினேன். அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் நாளேடான “ஈழநாடு” பணி மனையையும் அச்சுக்கூடத்தையும் தீக்கிரையாக்கினார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் என்ற வெடிகுண்டின் நீண்ட திரியின் முனையில் அக்கினிக் குஞ்சு ஒன்றை வீசிய காலம் அது.

ஆனால், இன்று இனப்படுகொலை நடந்தேறிய பிற்பாடு சாம்பலின் மீதும் புகையினுள்ளும் சித்தம் குழம்பிய நிலையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நின்று கடந்த ஆண்டுகளை ஆற்றாமையோடு திரும்பிப் பார்க்கிறோம். ஹெயின்றிச் ஹைன் என்கிற அறிஞர் ஒருமுறை சொன்னார்: முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்தது.

யாழ். நூலகம் எரியுண்டபோது நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். நானும் என்னுடைய நண்பர்கள் பலரும் அப்போது பல்கலைக்கழகத்தின் ‘பாலசிங்கம் விடுதி”யில் தங்கியிருந்தோம். அது உயர்ந்த மாடிக் கட்டிடம். தொலைவிலிருந்து புகை அடர்த்தியாகக் கிளம்புவதைப் பார்த்தோம். துவக்கத்த்தில் என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும் மிக விரைவிலேயே தகவல் பரவி விட்டது. தீவிர முயற்சி எடுத்தும் எரிந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அன்றிரவு எங்களால் செல்ல முடியவில்லை. படையினரின் வெறியாட்டு பயங்கரமானதாக இருந்தது.மறுநாள் காலைதான் செல்ல முடிந்தது. நாங்கள் அங்கு சென்ற போது நூலகம் முற்றாக எரிந்து போய்விட்டிருந்தது. அதனைப் பார்வையிட்டு அதிர்ச்சியிலும் கோபத்திலும் கையறு நிலையில் துடித்துக் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் எம்மைச் சூழ நின்றனர். இன்னும் பலர் தொடர்ச்சியாக நூலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

எரிந்துபோன நூலகத்தருகே இருந்த துரையப்பா விளையாட்டரங்கத்தில் தான் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கை அரச படையினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். விளையாட்டரங்கத்தின் பார்வையாளர் பகுதியில் இருந்த உயர்ந்த படிக்கட்டுக்களில் ஏறி நின்று எங்களைக் கேலி செய்தனர் அரச படையினர். அவர்கள் கையில் எதற்கும் தயாராகத் துப்பாக்கி இருந்தது.

“ஐயோ, எல்லாம் போச்சே! பாவம் நீங்கள்” என்று சிங்களத்தில் பேசியபடி எங்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்துக் கேலி செய்தார்கள். கவலையில் அழுவது போல வேடிக்கை செய்தார்கள்.அந்தச் சிரிப்பும், கேலியும், களிக்கூத்தும் கொண்டாட்டமும் முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பெருமளவில் அவர்களிடம் இருக்கிறது. இரண்டாவது சூரிய உதயத்திற்கு அப்பால் என்னிடம் இப்போது இருப்பது ‘காடாற்று’ என்ற புதிய கவிதைகளின் தொகுதி. சாம்பலிலும் புகையிலும் குருதியிலும் கண்ணீரிலும் அன்று பிறந்த என்னுடைய கவிதை மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறது. இனப்படுகொலைக்கும் படுகொலையின் மொழிக்கும் இலக்கியத்தினதும் கவிதையினதும் மறுமொழி என்ன என்பது அகற்றப்பட முடியாத பெருமலையாக நமது சிந்தனையிலும் இதயத்திலும் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தின் சாத்தியப்பாடுகள், எமக்கு ஏற்பட்ட ஆழமான மன வடுக்கள், கடந்தகாலம் பற்றிய மீள்பரிசீலனை, அரசியல் சுய விமர்சனம், மானுட விழுமியங்களினதும் மனித நாகரிகத்தினதும் அடிப்படைத் தோல்வி என்பன பற்றிய கருத்தாடல்கள் மெல்ல மெல்ல மேல் எழுகின்றன.

நூலகமும், யாழ்ப்பாணமும், ஈழநாடு இதழும் எரியூட்டப்பட்டமையும் அவற்றையொட்டி மேலும் தீவிரம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அரசியல், எனது கவிதா இயக்கத்துக்கு மட்டுமன்றி எனது இதழியல் ஊடகவியல் செயற்பாட்டுக்கும் ஒரு சிறு தீப்பொறியாய் அமைந்தது. எரியூட்டப்பட்டு மறுநாளே ‘எரிகிறது யாழ்ப்பாணம்’ என்று தமிழிலும் “Jaffna On Fire” என ஆங்கிலத்திலும் துண்டுப்பிரசுர வடிவில் செய்தித்தாளைக் கொண்டு வந்தோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அவையின் சார்பிலும் அவர்களுடைய ஓயாத உழைப்பாலும்தான் இது சாத்தியமாயிற்று.சேத விபரங்கள், நடந்த நிகழ்வுகள் பற்றிய விரிவான செய்திகள் போன்றவற்றைத் தாங்கி இவை கல்லச்சு (Cyclostyle) முறையில் தயாரித்து வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள எந்த அச்சகமுமே இவற்றை அச்சிடப் பயந்த நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிமார் சிலருடைய தீவிரமான ஒத்துழைப்பு மூலமே இவற்றை எங்களால் வெளிக்கொணர முடிந்தது. இந்த ஆவணங்களை இப்போது எங்கே போய்த் தேடுவது?

ஈழநாடு இதழ் மறுபடியும் வெளிவரத் துவங்கும் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் எரிகிறது யாழ்ப்பாணம் இதழ்களை மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இரு மொழியிலும் வெளிக்கொணர்ந்தோம். தமிழ் ஊடக மொழியைச் செம்மைப்படுத்துவதிலும் மரபற்ற எனது ஆங்கில உரைநடையைத் திருத்துவதிலும் காலம் சென்ற ஏ. ஜே. கனகரத்னா இரவிரவாக உதவி செய்தார்.போர்க்கால ஊடகவியலில் கால்பதித்த முதலாவது அனுபவம் அது. என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு அந்தக் காலம் கோபத்துடன் கூடிய ஒரு பெரிய பயில்புலமாக இருந்தது. எனினும் அநியாயமாக அத்தகைய வரலாறே மறுபடி மறுபடி மீள வருகிறது.

இந்த முயற்சிகளில் இரவு பகலாக எங்களோடு ஈடுபட்டவர்களும் நூலகம் எரியுண்ட இரவும் அதற்குப் பிற்பாடும் அயராமல் உழைத்தவர்களும் பின்னர் பல்வேறுபட்ட போராளி அமைப்புகளில் இணைந்து விட்டார்கள். பிற்பாடு பலர் முக்கியமான தலைவர்களாக மாறி விட்டனர். பலர் இன்று விடுதலைப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் “காணாமல்” போய் விட்டார்கள்.சிலர் இப்பொழுது புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். வேறு சிலர் இப்போது ‘ஜனநாயக’ வழிக்குத் திரும்பி விட்ட அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள்(!!!). இன்னும் சிலர் தொடர்ச்சியாக அரசியல் அஞ்ஞாத வாசத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இன்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கவும் முடியவில்லை.

நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இனப்படுகொலையின் பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

எனினும் மஹாகவி தனது கவிதையொன்றில் சொல்வது போல “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்பதைத்தான் நாங்களும் சொல்ல வேண்டும்.

சேரன்

(படங்கள் -ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமைநேரம்: 5:00 பிப - 8:30 பிபஇடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)5321 Finch Avenue EastScarborough, ONM1S 5W2 இல் நூலகம் அறிமுக நிகழ்வுப் படங்கள் நன்றி இளங்கோவின் முகநூல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக