வியாழன், ஜூலை 26
வியாழன், ஜூலை 5
முத்துலிங்கத்தின் கதைகள் ஒலிப்பதிவாக
புதன், ஜூலை 4
என்கடன் - அனுபவங்களின் அசைபோடல்
‘கோப்புகளோடும் மேசைகளோடும் அலுத்துச் சுழலும் மின்விசிறிகளோடும் சோம்பி ஒழுகும் மின்னொளியோடும் நிகழ்ந்தேறுகின்ற காரியாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதனை ‘என்கடன்’ எம் முன் கொண்டு வருகிறது’ என ந.சத்தியபாலன், வே. ஐ. வரதராஜனின் கவிதைத் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘.............கோவைகள்
ஒவ்வொன்றாய்ச் சரிதம் சொல்லும்
கோரிக்கைகளாய் வேண்டுதலாய்
விடய ஏடுகள் புரளும்
கோவைகளின் உயிர் மூச்சில்
உழன்று சோம்பிய முகங்கள்...’
(என் கடன்)
காரியாலயமொன்றினைக் கண் முன் கொண்டு வரும் சித்திரமாய் விளக்குகிறது ‘என்கடன்’.
‘அனுபவங்களின் அசைபோடல்களில்
ஆனந்தமும் சோகங்களும்
கற்ற கணிதமும் விஞ்ஞானமும்
அந்நியமாய்த் தோன்றும்
பேரேடுகளும் காசோலைகளும்
பிறிதொரு பாடமாய் மாறும்
அதிகாரியின் பணிப்புகளில்
இறுக்கங்கள் சூழ்ந்திருக்கும்
பெற்ற பட்டங்கள்
நூலிழையிற் தொங்கும்
தன்வயமிழந்து வெற்ற மனிதனாய்...
என அவரது (வ. ஐ. வரதராஜனது) ‘ஓய்வின் அசைபோடல்களில்...’ யதார்த்தமான பணியிட அனுபவங்களையும் ஈரமற்ற சூழலையும் எமக்கு உணர்த்துகிறது.’
‘முப்பத்தேழு வருடங்களாக அரச பணியில் ஈடுபட்டிருந்த வரதராஜன், தனது பணி ஓய்வு பெற்ற பிறகு, தன் முதலாவது தொகுப்பைத் தந்துள்ளார்’ என இதை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார் சத்தியபாலன்.
வே. ஐ. வரதராஜனின் கவிதைகள் பெரும்பாலும் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், அவர் வாழ்ந்த சூழல், அவருடைய கால நிகழ்ச்சிகள், அவருடைய பணி, பணியிடம், அவருடைய இயல்பு என்ற அமைவுளைக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக வரதராஜனின் பணிக்கால வாழ்க்கையையும் அதன்போதும் அதன் நிமித்தமாகவும் சந்தித்த அனுபவங்களையும் மனிதர்களையும் அவர்களுடைய நடத்தைகளையுமே பேசுகின்றன.
இந்த மாதிரியான அரச பணி அல்லது அலுவலகப் பணி வாழ்க்கையைப் பற்றி ஏராளம் சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் ஏராளம் தொடர்கதைகளின் மையக் களம் அலுவலகங்களையும் அங்குள்ள மனிதர்களைப் பற்றியவையுமே. இப்படி எழுதப்படுகின்றவற்றில் சில தேறியிருக்கின்றன. பலதும் வெறுமனே களிப்பூட்டும் வாசிப்புக்கே தீனியாகின்றன. இப்போது தமிழில் உள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நாடகங்களில் அலுவலகங்களும் அங்குள்ள மனித நடத்தைகளும் பிரச்சினைகளும்தான் மையப்படுத்திக் காண்பிக்கப்படுகின்றன. இவையும் சுவாரஷ்யப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டவையே.
ஆனால், வரதராஜன் இந்த அலுவலக வாழ்க்கையையும் அங்குள்ள யதார்த்தத்தையும் அதிகம் பேசாமல் தன்னுணர்வின் வழியாக வெளிப்படுத்துவதற்கு எத்தனிக்கிறார். சுவாரஷ்யமூட்டல் என்பதை விட இதை அவர் பகிர வேண்டும் என்றே உணர்கிறார்.
அலுவலக வாழ்க்கை என்பது பெரும்பாலும் கசப்பூட்டும் அனுபவத்தையுடையது. அது இயந்திரமயமாக அவர்களை விரைவில் மாற்றிவிடுகிறது. ஓடியோடித் தேயும் இயந்திரத்தைப் போன்றே அங்கே வேலைசெய்கிற மனிதர்களையும் மாற்றி விடுகிறது. எல்லா ஊழியர்களும் களைத்துச் சோர்ந்தே தினமும் வீடு திரும்புகிறார்கள். காலையில் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் பணிமனையின் படிகளில் ஏறும் ஊழியர்கள் மாலையில் வாடித் தளர்ந்து படியிறங்குகிறார்கள்.
இறுதியில் களைத்துச் சோர்ந்த நிலையிலேயே ஓய்வுபெறுகிறார்கள். இந்த ஓய்வு பெறுதல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு விடுதலையே. ஆனால் அதற்குள் அலுவலம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய அவலப்பரப்பே. அது அவர்களைச் சாறாகப் பிழித்து சக்கையாக்கி விடுகிறது. அதிலும் அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரமும் மனச் சாட்சியுள்ள – சமூக அக்கறையுடைய ஒரு பணியாளரைச் சிதைத்துக் கிழடுதட்ட வைத்துவிடுகின்றன. சேவைக்குப் பதிலாக, சேவையளித்தலை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, சேவையாளனின் உரிமைகள், பொறுப்புகள் என்பவற்றைப் பேணுவதற்கு அப்பால் அதிகாரிகள் கையில் எடுத்து நிலைநாட்டும் அதிகாரம் அலுவலகத்தின் – பணியின் அடிப்படைகளுக்கே எதிரானது. ஆனாலும் ஒரு சராசரியான பணியாளனால் இந்த அதிகார நடத்தைக்கு முன்னே எளிதாக இசைந்து கொள்ளவும் முடியாது@ எதிர்க்கவும் முடியாது. ஆகவே அவருக்கு இது ஒரு சித்திரவதையே. ‘நாற்காலி அதிகாரம்’ என்ற குறியீட்டை நாம் இந்த வகையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். எந்த அதிகாரமும் சித்திரவதைக்குள்ளாகும் உளநிலையையே உற்பத்தி செய்கிறது. இந்த அதிகார நிலையை இங்கே வே. ஐ. வரதராஜனும் தன்னுடைய வாழ்விலும் கவிதைகளிலும் உணர்ந்துள்ளார்.
வரதராஜனின் பெரும்பாலான கவிதைகள் அவருடைய பணி மற்றும் பணியிடம் பற்றியவையே. நிறைவேறாத விருப்பங்கள், தேவைகளை அவர் சொல்கிறார்,
‘இந்தச் சேவல் ஆங்காரத்துடன்
எப்போதும் கூவும்
செம்பழுப்பு இறகுகளை அடித்து
சிவப்பான கொண்டயை அசைத்து
அதிகாரத் தொனியுடன்,
குரலெடுப்பும்...’
(சேவல்)
‘எப்போதும் தேவைப்படுவது
இல்லாத ஒன்றுதான்...
...... வேண்டுதல்கள் யாவும்,
மனக் கதவினுள்ளே
இறுகப் பூட்டியிருக்கும்..’
(பூட்டிய கதவுகள்)
‘நான் நானாக இல்லை
என் சுயமிழக்க
துரத்தப்படுகிறேன்
கதிரையில் உறங்கும்
அதிகாரங்கள்
கண் மூடியபடியே
ஏவிக் கொண்டிருக்கும்...’
(வேலியும் பயிரும்)
‘.... மேலாதிக்க முனைப்புகளும்
அதிகாரத் தளைகளும்
திறமைகளை நசுக்கி ஆளும்
நிறைவேற்ற முடியாத
தேவைகள் முடிவிலியாய்
பூஜ்ஜியத்துள் உறையும்.
(பூஜ்ஜியம்)
இத தவிர, வாழ்வின் பிற அனுபவங்கள், பிற அக்கறைகளைக் குறித்து வரதராஜனின் உணர்கையும் கவனத்திற்குரியது. மனிதாபிமான நிலைப்பட்டு நின்று மனித நடத்தைகளின் பொய்த்தன்மைகளை வரதராஜன் வெளிப்படுத்துகிறார் (குரூரத்தின் சாட்சிகள், புதிய முகமூடிகள்....). சமகால வாழ்வில் தொலைந்து போன கிராமங்களையும் அவற்றின் அடையாளங்களையும் சிதைந்த வாழ்வையுமிட்டுத் துக்கங்கொள்கிறார் (தொலைந்த கிராமங்கள்). முதிர்கன்னியரின் நிலை கண்டு துயருறுகிறார் (படுநிலம்). இப்படிப் பல.
ஆனால், இந்தத் தொகுதியில் முக்கியமான கவிதைகளாக – செம்மையும் அழகும் கூடிய கவிதைகளாக இருப்பது ‘அப்பாவின் கார்’ ‘பல்லி’, ‘யதார்த்தமும் மாய யதார்த்தமும்’ ‘படுநிலம்’என்ற கவிதைகள். இதேவேளை பொதுவாகவே வரதராஜனின் கவிதைகள் எல்லாவற்றிலும் அவருடைய இயல்பினைப்போல ஒரு மென்தன்மையுடைய உரைப்பொலியே உண்டு. இதேவேளை இங்கே கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், இந்தக் கவிதைகள் பொதுவான அல்லது வழமையான ஈழத்துக் கவிதைகள் பேசும் உக்கிர அரசியற் பரப்பிற்கு வெளியே நிற்கின்றன என்பது. ஆனால், அப்படி உக்கிரமாக அரசியலைப் பேசத்தான் வேணுமா என்று எழும் கேள்வியும் ஒரு பக்கத்திலுண்டு. தன் வாழ்வனுபவத்தின் ஒரு பகுதியைப் பேசிய வரதராஜன் மறு பகுதியை எவ்வாறு உணர்ந்தார்? என்பது கேள்விக்குரியது.
‘என் கடன்’ என்ற தலைப்பில் ‘ஜீவநதி’யின் 17 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் வே. ஐ. வரதராஜனின் இந்த நூல் இவருடைய முப்பதாண்டுகால எழுத்தின் முதற்தொகுதி.
நன்றி :- புல்வெளி வலைப்பதிவு - கருணாகரன்
திங்கள், ஜூன் 18
பாலை
சூழலியல் பிரக்ஞையை மீட்டெடுக்கும் “பாலை” -ஆதி வள்ளியப்பன்
(நன்றி - தடாகம்)
தமிழ்த் திரைப்படங்கள் சூழலியல் உணர்வுடன் எடுக்கப்படுவதும், அதை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்து காட்சிப்படுத்துவதும் கனவில் மட்டும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால் செம்மை வெளியீட்டகம் தயாரித்து, செந்தமிழன் இயக்கியுள்ள “பாலை” படத்தில் அந்தக் கனவு நனவாகியுள்ளது.
தேசபக்தி, அந்நிய ஊடுருவல், காதல், சண்டை என தமிழ்த் திரைப்படங்கள் எதை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும், குறைந்தபட்ச சூழலியல் உணர்வுகூட இல்லாமல், காட்டையும் இயற்கை வளங்களையும் அழித்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. படங்களின் பெயரைக் குறிப்பிட்டால், சிலர் மல்லுக்கு நிற்கக்கூடும். தமிழ் சினிமா “மேதை”கள் முதல் திரையில் போராட்ட கருத்துகளை முன்வைப்பவர்கள் வரை இதிலிருந்து விதிவிலக்காக இருக்கவில்லை. சூழலியல் மீது திரைப்படங்கள் நிகழ்த்தும் வன்முறை பரவலாக பதிவு செய்யப்படாத ஒரு மிகப் பெரிய பிரச்சினை.
அந்த வகையில் “பாலை” பிரதிபலித்துள்ள சூழலியல் உணர்வு வேறு எந்த தமிழ்ப் படத்துடனும் ஒப்பிட முடியாதது.
முல்லை என்பது காடும் காடு சார்ந்த பகுதி. இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர்கள். ஆநிரை மேய்ப்பது, பால் பொருள்களை விற்பதுதான் இவர்களது பணியாக இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பகுதிதான் முல்லைக்குடி. வெளியிலிருந்து வந்து குடியேறிய ஒரு மக்கள் குழு, முல்லைக்குடி மக்கள் குழுவை செழிப்பான சொந்த மண்ணை விட்டு விரட்டி விடுகிறது. இதனால் முல்லைக்குடி மக்கள் வறண்ட பகுதியில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப், பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று சிலப்பதிகாரம் கூறியிருக்கிறது. முல்லைக்குடி பாலையை எதிர்நோக்கியிருக்கிறது. பாலைத்திணையில் எந்த இயற்கை வளமும் எஞ்சியிருக்காது என்பதால், கொள்ளையடித்துத்தான் வாழ வேண்டும். தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் இயற்கை வளம் பொய்த்துப் போகும் நிலையில்தான், கொள்ளையடித்தல் என்ற தொழில் நுழைய வேண்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தங்களை வெளியேற்றிய ஆயக்குடி மக்களை வீழ்த்துவதா அல்லது வாழ்க்கையை நெருக்கடிக்குத் தள்ளும் பாலையை கடப்பதா என்ற கேள்விக்கு முல்லைக்குடி தள்ளப்படுகிறது. முல்லைக்குடியும் அதன் மக்களும் மாண்டார்களா, மீண்டார்களா என்பதே கதை.
நல்ல வேளையாக இந்தக் கதைக்கு மிகை என்ற சாயத்தை பூசாமலும், சினிமாத்தன பகட்டை வலிந்து அணிவிக்காமலும் படமாக்கி இருக்கிறார்கள். எந்த கதையை தேர்ந்தெடுத்தார்களோ, அதற்கான நிலப்பகுதியை தேடி பொட்டல், சிறு காடு, மணல்வெளி, வயற்காடு, ஏரி என்று காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
அத்துடன் நின்றுவிடவில்லை. அந்த நிலப்பகுதியில் கிடைக்கும் ஆவரம்பூ, கண்ணுபூ, கொன்றை விதைகள், இலை கிரீடம் போன்றவை முல்லைக்குடி மக்களின் அணிகலன்களாக ஆகியுள்ளன. நாயகியின் பிரிக்க முடியாத உறவுகளில் ஒன்றாக இருக்கிறது ஒரு பனை மரம். பண்டைத் தமிழர்கள் போரில் அடையாளத்துக்காக மலர்களை சூடியது நாம் அறிந்ததுதான். மட்டுமில்லாமல், தங்கள் நிலப்பகுதியை - திணையை குறிக்கவும் மலர்களின் பெயர்கள், அதிலும் அந்தந்த நிலத்துக்குரிய சிறப்பு மலர்களை பெயராக வைத்த பண்பாடு நம்முடையது. அது திரையில் கச்சிதமாக வெளிப்படுகிறது.
முல்லைத்திணைக்கு இயல்பாகவே உரிய காலம், கார் காலம் (மழைக் காலம்). மழையை நம்பியே அவர்களது வாழ்க்கை இருந்தது என்பதால், மழை எப்பொழுது வரும் என்பதை கணிக்கும் பழக்கம் அந்த மக்களிடம் இருந்திருக்கிறது. காலத்தையும் நேரத்தையும் கணக்கிட்டு, மழையை வரவேற்க காத்திருக்கிறார்கள் அம்மக்கள். மழை என்பது உலகம் முழுவதற்குமான அடிப்படை ஆதார வளம். அதுவே இயற்கையும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களின் வாழ்க்கையும் செழிக்கக் காரணமாக இருக்கிறது. “நீரின்றி அமையாது உலகு” தொடங்கி பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், மற்ற ஆதாரங்களிலும் இதைத் தெளிவாக உணரலாம்.
தாவரங்கள், மலர்களை மட்டுமல்ல, காட்டுயிர்களையும் படத்திலிருந்து பிரிக்க முடியாத கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார் திரைப்பட இயக்குநர். அவரது கூர்ந்த கவனிப்பும், சிந்தனையும் இதில் பயன்பட்டுள்ளன. முல்லைக்குடிக்கு பாலை எனும் ஆபத்து வரப் போகிறது என்பதை சில இளைஞர்கள் முதன்முதலில் உணர்ந்து, தங்கள் குடிக்கு வழிகாட்டும் முதுவனைத் தேடி பதைபதைப்போடு ஓடிச் செல்கிறார்கள்.
அவர்களை பதைபதைக்க வைத்த காட்சி, ஒரு நீர் நிலையிலிருந்து நன்னீர் ஆமைகள் வேறிடம் நோக்கி அணிவகுத்து பயணிப்பதுதான். அவை எந்தத் திசையில் பயணித்தன என்பதை கேட்டவுடன், “பாலை வரப் போகுதுடா” என்ற புலம்புகிறார் முதுவன்.
மிகவும் அற்புதமான காட்சியமைப்பு இது.
அதேபோல, தன் காலடி ஓசை கேட்டு தூங்கும் முயலின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெல்லமெல்ல அடியெடுத்து வைக்கிறான் ஒருவன். முல்லை நிலப்பகுதியில் முயல்கள் இருக்கும் என்பது உண்மை. அதை படத்தின் நகர்வுக்கும் காட்சி ரீதியாக பங்களிக்க வைத்தது சிறப்பு.
இன்று வரை தண்ணீரில் ஈட்டி வீசி பிடிக்கும் பழங்குடி மக்களின் மீன்பிடி முறையையும் காட்டியிருக்கிறார்கள். பாடல்களும் நடன அசைவுகளும் பழங்குடிகளின் நடன அசைவுகளை பிரதிபலிக்கின்றன. இப்படி படமெங்கும் சூழலியல் உணர்வும் மானிடவியல் கூறுகளும் உற்று நோக்கி, ஆராயப்பட்டு ஆதாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் குழுக்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும் உள்ளனர்.
தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமிதப் படுபவர்களும் அதை சரியாகப் புரிந்துகொள்ளவும், வருங்கால சந்ததிகள் நமது பண்பாட்டின் சிறப்புகளை உணர்ந்து கொள்ளவும் இதுபோன்ற காட்சி ரீதியிலான படைப்புகள் பெரிய அளவில் உதவும். நமது வருங்காலத் தலைமுறைக்கு நமது அடையாளங்களை காட்சிரீதியாகச் சொல்ல மிகச் சிறந்த பதிவு “பாலை”.
ஞாயிறு, ஜூன் 17
விஜயன் விக்னேஸ்வரனின் 'சித்ரா' குறும்படம்
விஜயன் விக்னேஸ்வரன் இயக்கிய ’சித்ரா’ - என்ற குறும்படம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றுள்ளது. மிக எளிமையான ஒரு கதைக்கூறு. எப்படி நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள் என்று நீங்களும் பாருங்களேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றுள்ளது. மிக எளிமையான ஒரு கதைக்கூறு. எப்படி நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள் என்று நீங்களும் பாருங்களேன்.
வெள்ளி, ஜூன் 8
ஆயிஷா
இரா நடராசனின் 'ஆயிஷா' என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ள குறும்படம். குறுநாவல் வெளிவந்தபோது நான் எழுதிய அறிமுகக்குறிப்பு பின்னர் 'புதிய நூலகம்' இதழில் வெளிவந்தது. அதனை இந்த இணைப்பினூடாகச் சென்றும் வாசிக்கலாம்.
http://www.noolahamfoundation.org/blog/?p=146
ஆயிஷா: நூல் அறிமுகம்
By Noolaham Foundation on December 12, 2011 – 2:27 pm http://www.noolahamfoundation.org/blog/?p=146- சு. குணேஸ்வரன்தமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக் காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் …
ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது.
எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.
இன்றைய தனியார் கல்விக்கூடங்களில் இருந்து பாடசாலை, மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வரை மாணவர்களின் சொந்தக் கருத்துக்களையோ, தேடல்களையோ, வரையறுத்து தேய்ந்துபோன ஒலித்தட்டுப்போல் ஆசிரியர் கூறுவதையே மீண்டும் மீண்டும் கேட்கும் நிலைக்கு மாணவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்களிடம் இருந்து சீரிய சிந்தனைகளோ,அல்லது ஆயிஷா கேட்பதுபோல்;
“……கரோலின் ஏர்ஷர் போலவோ மேரி கியூரி போலவோ பெயர் சொல்லுகிற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்? ”
என்று கேட்கத் தூண்டுகிறது.
இதற்கு ஒரு வகையில் இந்தக் கல்விமுறையினையும், அதற்குள் ஊறிப்போய் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்ளாத ஆசிரியர்களையும் இரா. நடராசன் குற்றம் சாட்டுகிறார்.
ஓர் ஆக்க இலக்கியத்திற்குரிய அத்தனை பண்புகளையும் இந்தக் குறுநாவல் கொண்டிராவிட்டாலும் ஆயிஷா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. எமது சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். குறிப்பாக ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்!
புதன், ஏப்ரல் 18
ஒரு சிறு தீப்பொறி - சேரன்
சென்ற வாரம் நூலகம் நிறுவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக் ஆயிரக்கணக்கானவர்களையும் அரசியல் என்னும் பெருஞ்சுழலுள் இழுத்துவிட்ட காலம் அது. இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற தகவல்களின்படி, வடபுலத்தை ஆள்வோர் யாழ் நூலகத்தின் கணினிப் பிரிவையும் கழிவுப் பிரிவாக மாற்றுகிற திடீர் ரசவாதம் செய்யும் வல்லமை வாய்த்திருப்பவர்கள் என்றால் தமிழர்கள்உக்கும் நூலகங்களுக்கும் பெரிய அரசியல் பொருத்தப்பாடு இல்லை என்றே தெரிகிறது. இந்த அவலம் எவ்வகையான அரசியல் சுழியைக் கொண்டுவரப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முப்பத்தொரு முன்பு யாழ்ப்பாணப் பொது நூலகமும் யாழ்ப்பாணப் பட்டினமும் எரிக்கப்பட்ட போது ‘இரண்டாவது சூரிய உதயம்’ என்னும்கவிதையை எழுதினேன். அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் நாளேடான “ஈழநாடு” பணி மனையையும் அச்சுக்கூடத்தையும் தீக்கிரையாக்கினார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் என்ற வெடிகுண்டின் நீண்ட திரியின் முனையில் அக்கினிக் குஞ்சு ஒன்றை வீசிய காலம் அது.
ஆனால், இன்று இனப்படுகொலை நடந்தேறிய பிற்பாடு சாம்பலின் மீதும் புகையினுள்ளும் சித்தம் குழம்பிய நிலையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நின்று கடந்த ஆண்டுகளை ஆற்றாமையோடு திரும்பிப் பார்க்கிறோம். ஹெயின்றிச் ஹைன் என்கிற அறிஞர் ஒருமுறை சொன்னார்: முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்தது.
யாழ். நூலகம் எரியுண்டபோது நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். நானும் என்னுடைய நண்பர்கள் பலரும் அப்போது பல்கலைக்கழகத்தின் ‘பாலசிங்கம் விடுதி”யில் தங்கியிருந்தோம். அது உயர்ந்த மாடிக் கட்டிடம். தொலைவிலிருந்து புகை அடர்த்தியாகக் கிளம்புவதைப் பார்த்தோம். துவக்கத்த்தில் என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும் மிக விரைவிலேயே தகவல் பரவி விட்டது. தீவிர முயற்சி எடுத்தும் எரிந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அன்றிரவு எங்களால் செல்ல முடியவில்லை. படையினரின் வெறியாட்டு பயங்கரமானதாக இருந்தது.மறுநாள் காலைதான் செல்ல முடிந்தது. நாங்கள் அங்கு சென்ற போது நூலகம் முற்றாக எரிந்து போய்விட்டிருந்தது. அதனைப் பார்வையிட்டு அதிர்ச்சியிலும் கோபத்திலும் கையறு நிலையில் துடித்துக் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் எம்மைச் சூழ நின்றனர். இன்னும் பலர் தொடர்ச்சியாக நூலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
எரிந்துபோன நூலகத்தருகே இருந்த துரையப்பா விளையாட்டரங்கத்தில் தான் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கை அரச படையினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். விளையாட்டரங்கத்தின் பார்வையாளர் பகுதியில் இருந்த உயர்ந்த படிக்கட்டுக்களில் ஏறி நின்று எங்களைக் கேலி செய்தனர் அரச படையினர். அவர்கள் கையில் எதற்கும் தயாராகத் துப்பாக்கி இருந்தது.
“ஐயோ, எல்லாம் போச்சே! பாவம் நீங்கள்” என்று சிங்களத்தில் பேசியபடி எங்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்துக் கேலி செய்தார்கள். கவலையில் அழுவது போல வேடிக்கை செய்தார்கள்.அந்தச் சிரிப்பும், கேலியும், களிக்கூத்தும் கொண்டாட்டமும் முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பெருமளவில் அவர்களிடம் இருக்கிறது. இரண்டாவது சூரிய உதயத்திற்கு அப்பால் என்னிடம் இப்போது இருப்பது ‘காடாற்று’ என்ற புதிய கவிதைகளின் தொகுதி. சாம்பலிலும் புகையிலும் குருதியிலும் கண்ணீரிலும் அன்று பிறந்த என்னுடைய கவிதை மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறது. இனப்படுகொலைக்கும் படுகொலையின் மொழிக்கும் இலக்கியத்தினதும் கவிதையினதும் மறுமொழி என்ன என்பது அகற்றப்பட முடியாத பெருமலையாக நமது சிந்தனையிலும் இதயத்திலும் இருக்கிறது.
இந்தக் காலகட்டத்தின் சாத்தியப்பாடுகள், எமக்கு ஏற்பட்ட ஆழமான மன வடுக்கள், கடந்தகாலம் பற்றிய மீள்பரிசீலனை, அரசியல் சுய விமர்சனம், மானுட விழுமியங்களினதும் மனித நாகரிகத்தினதும் அடிப்படைத் தோல்வி என்பன பற்றிய கருத்தாடல்கள் மெல்ல மெல்ல மேல் எழுகின்றன.
நூலகமும், யாழ்ப்பாணமும், ஈழநாடு இதழும் எரியூட்டப்பட்டமையும் அவற்றையொட்டி மேலும் தீவிரம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அரசியல், எனது கவிதா இயக்கத்துக்கு மட்டுமன்றி எனது இதழியல் ஊடகவியல் செயற்பாட்டுக்கும் ஒரு சிறு தீப்பொறியாய் அமைந்தது. எரியூட்டப்பட்டு மறுநாளே ‘எரிகிறது யாழ்ப்பாணம்’ என்று தமிழிலும் “Jaffna On Fire” என ஆங்கிலத்திலும் துண்டுப்பிரசுர வடிவில் செய்தித்தாளைக் கொண்டு வந்தோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அவையின் சார்பிலும் அவர்களுடைய ஓயாத உழைப்பாலும்தான் இது சாத்தியமாயிற்று.சேத விபரங்கள், நடந்த நிகழ்வுகள் பற்றிய விரிவான செய்திகள் போன்றவற்றைத் தாங்கி இவை கல்லச்சு (Cyclostyle) முறையில் தயாரித்து வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள எந்த அச்சகமுமே இவற்றை அச்சிடப் பயந்த நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிமார் சிலருடைய தீவிரமான ஒத்துழைப்பு மூலமே இவற்றை எங்களால் வெளிக்கொணர முடிந்தது. இந்த ஆவணங்களை இப்போது எங்கே போய்த் தேடுவது?
ஈழநாடு இதழ் மறுபடியும் வெளிவரத் துவங்கும் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் எரிகிறது யாழ்ப்பாணம் இதழ்களை மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இரு மொழியிலும் வெளிக்கொணர்ந்தோம். தமிழ் ஊடக மொழியைச் செம்மைப்படுத்துவதிலும் மரபற்ற எனது ஆங்கில உரைநடையைத் திருத்துவதிலும் காலம் சென்ற ஏ. ஜே. கனகரத்னா இரவிரவாக உதவி செய்தார்.போர்க்கால ஊடகவியலில் கால்பதித்த முதலாவது அனுபவம் அது. என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு அந்தக் காலம் கோபத்துடன் கூடிய ஒரு பெரிய பயில்புலமாக இருந்தது. எனினும் அநியாயமாக அத்தகைய வரலாறே மறுபடி மறுபடி மீள வருகிறது.
இந்த முயற்சிகளில் இரவு பகலாக எங்களோடு ஈடுபட்டவர்களும் நூலகம் எரியுண்ட இரவும் அதற்குப் பிற்பாடும் அயராமல் உழைத்தவர்களும் பின்னர் பல்வேறுபட்ட போராளி அமைப்புகளில் இணைந்து விட்டார்கள். பிற்பாடு பலர் முக்கியமான தலைவர்களாக மாறி விட்டனர். பலர் இன்று விடுதலைப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் “காணாமல்” போய் விட்டார்கள்.சிலர் இப்பொழுது புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். வேறு சிலர் இப்போது ‘ஜனநாயக’ வழிக்குத் திரும்பி விட்ட அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள்(!!!). இன்னும் சிலர் தொடர்ச்சியாக அரசியல் அஞ்ஞாத வாசத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இன்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கவும் முடியவில்லை.
நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இனப்படுகொலையின் பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.
எனினும் மஹாகவி தனது கவிதையொன்றில் சொல்வது போல “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்பதைத்தான் நாங்களும் சொல்ல வேண்டும்.
சேரன்
(படங்கள் -ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமைநேரம்: 5:00 பிப - 8:30 பிபஇடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)5321 Finch Avenue EastScarborough, ONM1S 5W2 இல் நூலகம் அறிமுக நிகழ்வுப் படங்கள் நன்றி இளங்கோவின் முகநூல்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









